காஞ்சிபுரம்: பேருந்தில் அதிக ஒலியுடன் திரைப்படப் பாடல் ஒலிபரப்பியது தொடர்பாக நீதிபதி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை பேருந்து உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி செம்மல். இவர் தனது சொந்த வேலையாக திண்டிவனம் சென்று விட்டு காஞ்சிபுரத்துக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் திரைப்படப் பாடல்கள் அதிக ஒலியுடன் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதைக் கண்ட நீதிபதி செம்மல் ஒலி அளவை குறைக்கும்படி நடத்துநரிடம் அறிவுறுத்தியுள்ளார். பலமுறை கூறியும் ஓட்டுநர், நடத்துநர் இருவரும் நீதிபதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை.
இதைத் தொடர்ந்து, நீதிபதி காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறையில் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர், போக்குவரத்துக் காவலர் ஆகியோர் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே பேருந்தை நிறுத்தி புகார் குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.