இந்து அறநிலையத் துறையினரை கண்டித்து சிதம்பரம் மேலவீதியில் பாஜக மாவட்ட தலைவர் மருதை தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

இந்து அறநிலையத் துறையினரை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்: சிதம்பரத்தில் 140 பேர் கைது

செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி வழிபட்ட, இந்து அறநிலையத் துறையை கண்டித்து, தீட்சிதர்களுக்கு ஆதரவாக சிதம்பரத்தில் காவல்துறையின் தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 12 பெண்கள் உள்ளிட்ட 140 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆனி திருமஞ்சன நிகழ்வையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி வழிபட4 நாட்களுககு கோயில் நிர்வாகத்தினரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அரசின் முந்தைய உத்தரவுக்கு எதிராக இது இருப்பதாக பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே இந்த தடையை மீறி இந்து அறநிலையத் துறையினர் கனக சபையில் ஏறி வழிபாடு நடத்தினர்.

இதைக் கண்டித்து ஆர்ப் பாட்டம் நடத்த சிதம்பரம் நகர போலீஸாரிடம் பாஜக மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் மனு அளித்திருந்தார். இந்த நிலையில். அவரது வீட்டு முன்பு நேற்று காலை போலீஸார் அனுமதி மறுப்பு கடிதத்தை ஒட்டினர். போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், சிதம்பரம் மேலவீதி ராமர் கோயில் அருகே நேற்று மாலை கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் கே.மருதை தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் பாலசுப் பிரமணியன், நகர தலைவர் சத்திய மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்து சமய அறநிலையத் துறையினருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையிலான போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்ளிட்ட 140 பேரை கைது செய்து வடக்குர வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இவர்கள் அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர். பாஜக மாவட்ட துணைத் தலைவர் வீட்டு முன்பு நேற்று காலை போலீஸார் அனுமதி மறுப்பு கடிதத்தை ஒட்டினர்.

SCROLL FOR NEXT