வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி. படம்: வி.எம்.மணிநாதன் 
தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

செய்திப்பிரிவு

வேலூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2002-ல் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அமைச்சர் பொன்முடியுடன், அவரது மனைவி விசாலாட்சி, பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் மணிவண்ணன், அறங்காவலர் நந்தகோபால் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். மேற்கண்ட கால கட்டத்தில் இவர்கள் ரூ.3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 66 மதிப்பிலான முரணான சொத்துக்கள் சேர்த்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. அதன்படி, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா, அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரணைக்காக அக்டோபர் 19-ம் தேதி எடுத்துக்கொண்டார். நவம்பர் 7-ம் தேதி நீதிபதி முன்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகினர்.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை 5.25 மணிக்கு நீதிபதி வசந்த லீலா தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் இருவரையும் விடுதலை செய்வதாகவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த சரஸ்வதி, மணிவண்ணன், நந்தகோபால் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பையொட்டி அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

SCROLL FOR NEXT