சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள், சிறுதானியங்களையும் சேர்த்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மே 4-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே உள்ள உணவுப் பட்டியலில் சில மாற்றங்களை செய்து, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டச் செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திங்கள்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவை, சேமியா, அரிசி, கோதுமை ரவை உப்புமாவில் ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும்.
செவ்வாய்க்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய ரவை காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி அல்லது கோதுமை ரவை கிச்சடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வழங்கலாம்.
புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவை பொங்கல் அல்ல வெண் பொங்கல் வழங்கலாம். வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவை உப்புமா, கோதுமை ரவை உப்புமா ஆகியவற்றில் ஒன்றை வழங்கலாம். வெள்ளிக்கிழமை காய்கறி சாம்பாருடன் சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவை காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி ஆகியவற்றில் ஒன்றை வழங்கலாம்.
ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் உணவுகளில் தற்போது கூடுதலாக அனைத்து நாட்களிலும் காய்கறி சாம்பார் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சமூக நலத் துறை செயலர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் தினசரி வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களான அரிசி, ரவை, கோதுமை ரவை, சேமியா ஆகியவை 50 கிராம் என்ற அளவில் இருக்க வே்ணடும்.
உள்ளூரில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூர் காய்கறிகள், சமைத்த பின் 150- 200 கிராம் உணவு மற்றும் 100 மி.கி. காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்கப்பட வேண்டும். வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.