கோவை: முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக பெண் ஆதரவாளரின் ஜாமீன் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி(56). இவர், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளதாக திமுக பிரமுகர் ஹரீஷ், சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், கடந்த 20-ம் தேதி அவரை போலீஸார் கைது செய்தனர். உமா கார்க்கியை காவலில் எடுத்து 2 நாட்கள் கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்த நிலையில், சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சென்னை காவல்துறையினரும் அவரை கடந்த 24 -ம் தேதி அழைத்து சென்றனர். இந்நிலையில், உமா கார்க்கி தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, கோவை 4-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனுவுக்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.