தமிழகம்

மின் நுகர்வோருக்கு ‘ஷாக்’ தரும் மின்வாரிய ஊழியர்கள் - கூடுதல் பணம் தருவதை நிறுத்த வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: புதிய வீடு கட்டும் நபர் முதற்கட்டமாக ஆழ்குழாய் அமைத்து அதிலிருந்து தண்ணீரை பயன்படுத்த மின்வாரிய அலுவலகத்தை அணுகி, தற்காலிக வணிக பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

இது நிர்வாக ரீதியான கட்டணம். இதில், மின் கம்பம் ஏற்றிவர வாகன செலவு, கம்பம் நடுதல் மற்றும் மின் இணைப்பு வழங்கி கணக்கீடு மீட்டர் பொருத்துதல் உள்ளிட்டவை அடங்கும்.

ஆனால் மின் கம்பம் ஏற்றி வரும் வாகன வாடகை, குழி தோண்ட பொக்லைன் செலவு, மின் இணைப்பு வழங்க வரும் ஊழியர்களுக்கு தேநீர், சிற்றுண்டி, மதிய உணவுக்கு உரிய தொகை, இதுதவிர சிறப்பு ஊக்கத் தொகை என மின் இணைப்பு பெறும் நுகர்வோருக்கு குறைந்தபட்ச செலவு ரூ.25 ஆயிரம் வரை ஆகிறது. இதேபோல் விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் மின் இணைப்பு பெற நிர்வாக ரீதியான கட்டணங்களை செலுத்தினாலும், மேற்கூறியவற்றில் இருமடங்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

அதே நேரத்தில் மும்முனை இணைப்பு பெற்ற விவசாயிகள் அவரது பகுதியில் இயங்கி வந்த மின்மாற்றி இயற்கை சீற்றங்களாலோ அல்லது பழதானாலோ அதை மாற்றும் செலவும் விவசாயிகளையே சாரும். இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் பேசியபோது, “தமிழ்நாடு மின் வாரியம் 9 மண்டலம், 37 மின் பகிர்மான வட்டங்களுடன் செயல்படுகிறது. மின்சார சட்டப்படி மின் நுகர்வோர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மின் நுகர்வோர் குறைதீர் மன்றம், மின் குறைகள் தீர்ப்பாளர் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மின் குறை தீர்ப்பாளர், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தைச் சேர்ந்தவர். மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. இதன் தலைவராக மேற்பார்வை பொறியாளர் செயல்படுகிறார். மின்தடை ஏற்பட் டால் மின்னகம் எனும் புகார் மையம் உள் ளது. 9498794987 என்ற எண்ணில் புகார் செய் தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படுகிறது” என்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் தொழிற் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், “மின் இணைப்பு பெற வரும் நுகர்வோருக்கான தளவாட பொருட்கள் அனைத்தும் மின் வாரியம் தான் வழங்க வேண்டும். நுகர்வோரிடம் கூடுதல் தொகை கேட்பதை தவிர்த்து விடுங்கள் என்று ஊழியர்களிடம் அறிவுறுத்தி வருகிறோம்.

நுகர்வோரும் கூடுதல் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இதுதவிர ஒப்பந்த பணியாளர்கள் மூலம் சில இடங்களில் இதுபோன்ற பணிகள் மேற்கொண்டு வரு கின்றனர். மின்வாரியம் ஒப்பந்ததாரருக்கு அதற் குரிய செலவினத் தொகை வழங்க காலதாமதம் செய்யும் சூழலில் ஒப்பந்ததாரர் நுகர்வோரிடம் பணம் கேட்கும் நிலை உள்ளது. இதையும் மின்வாரியம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT