திருப்புவனத்தில் பசுமையாக காணப்படும் புதூர் மயானம். 
தமிழகம்

திருப்புவனம் | சிசிடிவி கேமராவுடன் பசுமை மயானங்கள் - சொந்த செலவில் உருவாக்கிய பேரூராட்சித் தலைவர்

இ.ஜெகநாதன்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சொந்த செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பசுமை மயானங்களை பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உருவாக்கி காட்டியுள்ளார்.

தமிழகத்தில் பராமரிப்பின்றி உள்ள மயானங்களை சீரமைத்து பசுமை மயானங்களாக மாற்ற வேண்டுமென தலைமை செயலர் வெ.இறையன்பு நேற்று மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இந்த பசுமை மயானங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது சொந்த செலவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உருவாக்கி காட்டியுள்ளார்.

திருப்புவனம் பேரூராட்சியில் புதூர், நெல்முடிக்கரை ஆகிய 2 இடங்களில் தலா 2 ஏக்கரில் மயானங்கள் உள்ளன. அவை இரண்டும் பராமரிப்பின்றி இருந்தன. இந்நிலையில் 2011-ம் ஆண்டு சேங்கைமாறன் தனது மனைவி வசந்தி பேரூராட்சித் தலைவராக இருந்தபோது, 2 மயானங்களையும் சீரமைத்தார்.

இரண்டிலும் தலா 100 தென்னை மரக்கன்றுகள் மற்றும் மா, பலா, கொய்யா ஆகிய மரக்கன்றுகளை நட்டார். அவற்றை பராமரிக்க ஆழ்த்துளை கிணறு அமைத்ததோடு, காவலர்களையும் நியமித்தார். சில ஆண்டுகளில் இருந்தே மரங்கள் பலன் கொடுத்து வருகின்றன. தற்போது சேங்கைமாறன் தலைவரானதும் சமூக விரோதிகளை வருவதை தடுக்க தலா 6 சிசிடிவி கேமராக்களை மயானங்களில் பொருத்தினார். தேசிய நெடுஞ்சாலையையொட்டி பசுமையாக இருப்பதால் அவ்வழியாக வெளியூர்களுக்கு செல்வோர் கூட, மயானம் என்று பாராமல் அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து சேங்கைமாறன் கூறியதாவது: "உறவினர் அஸ்தியை கரைக்க ராமேசுவரத்துக்கு சென்றவர்கள், அசதியில் எங்கள் ஊரில் இரவில் தங்கினர். காலையில் எழுந்து பார்த்தபோது அஸ்தியில் இருந்தவை பூவாக மாறின. இதையடுத்து அவர்கள் ராமேசுவரம் செல்லாமலேயே ஊருக்கு திரும்பி சென்றனர் என்பது வரலாறு. இதனால் தான் எங்கள் ஊரை ‘திருப்பூவனம்’ என்று அழைக்கின்றனர்.

காலப்போக்கில் மறுவி திருப்புவனம் என்றானது. இத்தகைய பெருமைமிக்க எங்கள் ஊரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வருவோர், சிரமப்படுவதை தடுக்கவே மயானத்தை பூங்காக்களாக மாற்றினேன். தற்போது இங்கே வருவோர் பசுந்தோட்டத்துக்குள் வருவது போல் எண்ணுகின்றனர். இது எனக்கு பெரும் ஆத்ம திருப்தியை அளிக்கிறது. உடலை புதைக்கும் இடத்தில் ஒரு வாழை மரம் நடுவதை வழக்கம் வைத்துள்ளோம். மேலும் நெல்முடிக்கரை மயானத்தில் ரூ.1.8 கோடியில் நவீன தகன மேடை அமைத்து வருகிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT