மாநில தலைமை தகவல் ஆணையராக ஷகீல் அக்தர், மாநில தகவல் ஆணையர்களாக பி.தாமரைக் கண்ணன், ஆர்.பிரியகுமார், கே.திருமலைமுத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ் ஆகியோருக்கு ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உடன் தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் உள்ளிட்டோர். 
தமிழகம்

தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்: மேலும் 4 ஆணையர்களும் பதவியேற்றனர்

செய்திப்பிரிவு

சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தில், ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், தகவல் ஆணையராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலம் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது.

தொடர்ந்து, புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகில் அக்தரும், தகவல் ஆணையர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் ஆர்.பிரியகுமார், ஓய்வு பெற்ற ஐசிஎல்எஸ் அதிகாரி கே.திருமலைமுத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ் ஆகியோர் கடந்த சில தினங்கள் முன் நியமிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

முதல்வரிடம் வாழ்த்து: இந்நிலையில், தலைமை தகவல் ஆணையர் ஷகில் அக்தர், ஆணையர் பி.தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமை தகவல் ஆணையர் ஷகில் அக்தர், ஆணையர்கள் பி.தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 4 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

          
SCROLL FOR NEXT