தமிழகம்

வெப்பநிலை நாளை முதல் குறையும் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிய பிறகும் தமிழகத்தில் வெப்பநிலை குறையாத நிலையில், நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் என்று சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அரபிக் கடலில் நிலவும் 'பிப்பர்ஜாய்' புயல் காரணமாக கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதில் சில தினங்கள் தாமதம் ஏற்பட்டு, கடந்த8-ம் தேதி பருவமழை தொடங்கியது. வழக்கமாக பருவமழை தொடங்கியதும் தமிழகப் பகுதியில் வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் தற்போது கடும் வெயில் வாட்டி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் கூறியதாவது: அரபிக் கடலில் அதிதீவிர புயல் ‘பிப்பர்ஜாய்' நிலவி வருவதால், அரபிக் கடலில் இருந்து கேரளா வழியாக தமிழகம் நோக்கி மேற்கு திசைக் காற்று வீசுவது பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதி காற்றையும் புயல் ஈர்த்துக் கொள்வதால் தமிழகம் நோக்கி வீச வில்லை. இதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகமாக உள்ளது.

‘பிப்பர்ஜாய்' புயல் இன்று கரையைக் கடந்த பிறகு, நாளை முதல்காற்று வீசுவதில் மாற்றம் ஏற்பட்டு,அரபிக் கடலில் இருந்து மேற்கு திசைக் காற்று தமிழகம் நோக்கி வீசத் தொடங்கும். அதன் பிறகு, தமிழகத்தில் தற்போது உள்ளதைவிட மழை வாய்ப்பு அதிகரிக்கும். அதனால் நாளை முதல் தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

4 நாட்கள் மழை வாய்ப்பு: இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (ஜூன் 15, 16) ஓரிரு இடங்களிலும், 17-ம் தேதி சில இடங்களிலும், 18-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். சில இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT