ஜெயங்கொண்டத்தில் நேற்று இரவு நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. 
தமிழகம்

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை

செய்திப்பிரிவு

அரியலூர்: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 எம்பி சீட்டுகளை வென்று, மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசை உலக நாடுகளே பாராட்டுகின்றன. 2014-ல் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் காரணம்.

திராவிட மாடல் ஆட்சியில் அரியலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது தான் அவர்களது சாதனை. இதை மாற்ற சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாஜக அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெறுவார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும், முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர். சாதாரண கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் கூட தற்போது மருத்துவ படிப்புகளுக்கு செல்கின்றனர். 2014-ல் போக்குவரத்து துறையில் பணி நியமன முறைகேடு வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், உயர்நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டதால், தற்போது அமலாக்கத் துறை அவரை கைது செய்துள்ளது.

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்த இடத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளார். அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டியல் அணித் தலைவர் பெரியசாமி, மாவட்டத் தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT