தமிழகம்

மருத்துவ படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு கூடாது: இபிஎஸ், ஓபிஎஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவப் படிப்புக்கு பொது கலந்தாய்வு நடத்துவதை கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: எந்த நிலையிலும் தமிழகத்தின் உரிமையைப் பறிக்கின்ற எந்த சட்டத்தையும் அதிமுக ஆதரித்ததில்லை. இந்நிலையில் தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், இளநிலை மருத்துவப் படிப்பில் அகிலஇந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல. எனவே, தற்போதுள்ள நடைமுறையிலேயே எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையத்தை வலி யுறுத்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மாநிலத்துக்கு உட்பட்ட மருத்துவ இருக்கைகளை மாநில அரசு நிரப்புவது என்பதுதான் பொருத்தமுடைய ஒன்று. அப்பொழுதுதான் மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு ஆகியவை காப்பாற்றப்படும். எனவே, பொதுக் கலந்தாய்வை மத்திய மருத்துவக் குழு நடத்தும் என்ற அறிவிப்பாணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் பொது கலந்தாய்வு நடத்துவதைக் கைவிட வேண்டுமென தெரிவித் துள்ளனர்.

SCROLL FOR NEXT