சென்னை: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில், "தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை. 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும். வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.