சென்னை: மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், புதன்கிழமை (ஜூன் 7) முதல் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 07.06.2023 (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும்போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையைப் பொறுத்தவரை, கடந்த 30 நாட்களில் பயணிகள் மெட்ரோ ரயிலில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
கட்டண தள்ளுபடியின் விவரங்களை மேலும் தெரிந்துகொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள வாகன நிறுத்த கட்டண விவரங்கள் (https://chennaimetrorail.org./parking-tariff/), மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் (Banners) மற்றும் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் பணியாளர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.