தமிழகம்

தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழக அணியை உடனே தேர்வு செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தேசிய விளையாட்டு போட்டிகளில்பங்கேற்க தமிழக அணியை விரைந்து தேர்வு செய்ய வேண்டும்என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: டெல்லியில் நடைபெறவுள்ள, பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழக அணி சார்பில் இதுவரை விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் தேசியவிளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க முடியாதநிலை இருப்பதாக வரும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பது கனவாகும்.

அந்த கனவை சீர்குலைத்திருக்கிறது திமுக அரசு. புதுச்சேரியிலிருந்து தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பள்ளிகள்அணி ஏற்கெனவே தேர்வாகியிருக்கும் நிலையில், தமிழக அணிதேர்வு இதுவரை நடைபெறாமல் இருப்பது, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கையாலாகாதத்தனத்தைக் காட்டுகிறது. பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான வாய்ப்புகளை வழங்காமல், முதல்வர் குடும்பத்துடன் சென்று ஐபிஎல் போட்டிகள் பார்த்தால், பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம் பெருகிவிடாது.

எனவே விளையாட்டு வீரர்களின் கனவுகளோடு விளையாடாமல், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியைத் விரைந்து தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT