சென்னை: ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்து பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படும் 6 பேருடன் விரைவில் தொடர்பு கொள்வோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் உதயநிதிநேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒடிசாவில் இருந்து நாங்கள்புறப்படும்போது, விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த 8 பேர் குறித்த தகவல் தெளிவில்லாமல் இருந்தது. அதன்பின், அதிகாரிகளிடம் அவர்கள் குறித்து கேட்டேன். அதில் 2 பேரிடம் நேரடியாகவே பேசிவிட்டோம். மீதமுள்ள 6 பேர்பாதுகாப்பாக இருப்பதாக உடன்சென்ற பயணிகள் தெரிவித்தனர்.
அவர்கள் பயணித்த பெட்டி பாதிப்புக்குள்ளாகவில்லை என தெரிய வந்துள்ளது. அந்த 6 பேரிடமும் இதுவரை பேச இயலவில்லை. விரைவில் அவர்களிடம் இருந்து பதில் கிடைக்கும். இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் நேற்று இரவு வரை 88 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒடிசா அரசின் இணையதளத்தில், விபத்தில் இறந்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு அறிவித்த அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 11 அழைப்புகள் மட்டுமே வந்தன. அதில் காணவில்லை என்று குறிப்பிட்டு எந்த அழைப்பும் வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.