கோப்புப்படம் 
தமிழகம்

9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி,சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 5) சில இடங்களிலும், நாளை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, இன்று நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.

வரும் 7, 8-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னைமற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம்ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

ஜூன் 4-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 5 செ.மீ.,தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 4 செ.மீ., ஈரோடு மாவட்டம் பவானி, சென்னிமலை, அம்மாபேட்டை, சேலம் மாவட்டம் எடப்பாடி,விருதுநகர் மாவட்டம் பிலவக்கல் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT