தமிழகம்

ரயில் விபத்தால் தள்ளிவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஜூன் 7-ல் நடைபெறும்

செய்திப்பிரிவு

சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக தள்ளிவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

திமுக தலைவராக இருந்தமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி தொடங்கியது. இதற்காக நேற்று முன்தினம் அரசு சார்பிலும் திமுக தரப்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்துகாரணமாக துக்கம் அனுசரிக்கப்பட்டதால், ஒரு சில நிகழ்வுகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

திமுக சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், வடசென்னையில் உள்ள பின்னி மில்வளாகத்தில் 3-ம் தேதி மாலை 6மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுவதாக இருந்தது. ரயில் விபத்து காரணமாக இந்த பொதுக்கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், வரும் 7-ம் தேதி மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணிகட்சிகளைச் சேர்ந்த கி.வீரமணி,கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், கே.எம்.காதர்மொய்தீன், திருமாவளவன், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், தி.வேல்முருகன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT