சென்னை: ஒடிசா மாநில அரசின் மீட்பு நடவடிக்கைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்கும் நோக்கில், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஒடிசா மாநிலத்துக்கு சென்றனர்.
2 குழுக்களாக ஆய்வு
அமைச்சர்கள், போக்குவரத்து துறை செயலர் ஆகியோர், விபத்துநேரிட்ட பாலசோர் என்ற இடத்துக்குஅரசு ஹெலிகாப்டரில் சென்றனர்.அமைச்சர்கள் கொண்ட குழுவினர்விபத்து நடந்த இடத்தில்உள்ள நிலவரங்களையும், மேற் கொள்ளப்பட்டு வரும் நிவாரணப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலர், ஆசிரியர்தேர்வாணையக் குழுத் தலைவர்ஆகியோர், ஒடிசாவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றனர்.விபத்து நேரிட்ட இடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் உதயநிதிஸ்டாலின், காயமடைந்தவர்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.தொடர்ந்து ஒடிசா மாநில தலைமை செயலாளருடன் விபத்து தொடர்பாக குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
ஒடிசா முதல்வர் உறுதி
பின்னர், மாலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட குழுவினர், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்து,தமிழகத்தை சேர்ந்த பயணி களின் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கை பணிகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்துகலந்துரையாடினர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் உறுதியளித்தார்.
தீவிர மீட்பு பணி மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் ஒடிசா அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளதாகவும், தமிழக அரசு எந்த உதவியும் செய்ய தயாராகஇருப்பதாகவும் அவரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட உள்ளோம். அங்கு தவிக்கும் தமிழர்களை மீட்டு, அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழக முதல்வர் ஒடிசா முதல்வரோடு தொடர்ந்து பேசி வருகிறார்” என்றார்.