புதுச்சேரி: சென்னையில் அண்மையில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் சொந்த ஊரான புதுவையில் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதில், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மணமகள் வீட்டார் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய்,பழம், வெற்றிலை பாக்குடன் குவாட்டர் அளவு மது பாட்டிலையும் சேர்த்து கொடுத்தனர்.
இதுபற்றி பெண்ணின் தாய்மாமா கூறுகையில், "உறவினர்களும், சென்னையில் இருந்து வந்தோரும் விளையாட்டாக கேட்டதால், வித்தியாசமாக மதுபாட்டில் தர முடிவு எடுத்தேன். ஆண்களுக்கு தாம்பூல பை தரும்போது அதில் மதுபாட்டிலையும் சேர்த்து தந்தோம். பெண்களுக்கு வழக்கமான தாம்பூல பை தந்தோம். இதற்கு வேறு ஏதும் காரணமில்லை. தாய்மாமனாக உறவினர்களுக்காகதான் மதுபாட்டில் தந்தேன்" என்றார்.
அநாகரீகத்தின் உச்சம்: இது, பல்வேறு தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் தனது ட்விட்டர் பதிவில் " இது அநாகரீகத்தின் உச்ச கட்டம், கலாச்சார சீர்கேடு, பண்பாட்டு சீரழிவு. உடனடியாக தொடர்புடையவர்கள் மீது புதுவை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.