சென்னை: சென்னையில் இரவுநேர மின்தடையை சரி செய்ய, 10 சிறப்பு குழுக்கள் மற்றும் 125 நடமாடும் ரோந்து வாகன சேவையை, மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தொடங்கி வைத்தார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமைஅலுவலகத்தில், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில், 10 சிறப்பு குழுக்கள் மற்றும் 125 நடமாடும் ரோந்து வாகன சேவைகளை நேற்று தொடங்கி வைத்தார்.
மேலும், ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள 70 மின்தடை நீக்க மையங்களுடன் (மின்னகம் நீங்கலாக) கூடுதலாக, தற்போது, 77 புதிய மின்தடை நீக்க மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, 5 கருவி காப்பு சோதனை சிறப்பு குழுக்கள் (எம்.ஆர்.டி.), உயரழுத்த மின் புதைவட மின் கேபிள் பழுதுகளை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்யும் உபகரணங்களுடன் கூடிய 4 சிறப்பு வாகனங்களும், உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மேல்நிலை கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய 7 வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் ஆங்காங்கே மின்சாதனங்கள் பழுது காரணமாக மின்தடை ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில் தொடர்ந்து பிரச்சினை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
போர்க்கால அடிப்படையில் என்னென்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்து வருகிறோம். இன்று (நேற்று) சென்னை முழுவதும் மின்தடைக்கு உடனடி தீர்வு வழங்கக்கூடிய வகையிலான 125 ரோந்து வாகனங்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளன.
அனைத்து மண்டலங்களிலும் இரவுநேர ரோந்து பணிக்காக 125 வாகனங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் கேங்மேன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை கண்காணிக்க 10 உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய வாகனங்கள் செல்ல முடியாத இடத்துக்கு, ஆட்டோக்கள் மூலம் சென்று மின்தடைக்கு நிவர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடக்காத விஷயங்கள் மின்துறையில் சில நாட்களாக நடைபெறுகிறது, மின்மாற்றிகள் தீப்பிடித்து எரிகின்றன.
அரும்பாக்கம் கொடுங்கையூர், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும், மீண்டும் இது போன்ற பிரச்சினைகள் நடைபெறுகிறது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
ஆனால், அதையெல்லாம் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மற்றவர்களை குற்றம்சாட்டி ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.