வாழ்வு இனிது

இயற்கையோடு உரையாடுவோம்! - சென்னையில் ஒளிப்படக் கண்காட்சி

உதயசங்கரன் பாடகலிங்கம்

‘இதிலிருந்து நாம் உணர்வது என்ன?’ – ’இயற்கை உடனான உரையாடல்’ ஒளிப்படக் கண்காட்சி சென்னை எம்.ஆர்.சி.நகரில் நடைபெறுகிறது. அவ்தார் கலை அறக்கட்டளையில் நடந்துவரும் இக்கண்காட்சியில் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர்களின் படைப்புகள் நிறைந்திருக்கின்றன.

கண்கள், தும்பிக்கை என யானையின் அங்கங்களைக் கூர்மையாக அவதானிப்பதில் தொடங்கிக் காட்டின் மாபெரும் உயிரினமாக அதனை உணரச் செய்வதுவரை நம் மனதுக்குள் மாயாஜாலம் நிகழ்த்துகின்றன செந்தில்குமரனின் ஒளிப்படங்கள்.

நீல் பட்டாச்சார்ஜீ, வினிதா பாரட்டோ உள்ளிட்ட ஒளிப்படக் கலைஞர்களின் படங்கள் இதிலிருக்கின்றன. பாறையிடுக்கு நடுவே தென்படும் புலியின் பாதியுருவம், பழங்குடிகளின் வாழ்வு, முகத்தில் புலிக்கோலம் இட்ட கலைஞன் என எளிதில் உருவகிக்கமுடியாத காட்சிகளைத் தாங்கி நிற்கின்றன.

கேமிரா கண்களால் காண்கிற வகையில் பல அடுக்குகளைக் கொண்ட படைப்புகள் இருந்தாலும், அவற்றை விஞ்சி நிற்பது எளிமையான உள்ளடக்கத்தைக் கொண்டவையே. ஒரே பார்வையில் உலகத்தரத்திலான ஒளிப்படங்களைக் காண விழைபவர்களுக்கு ஏற்ற அனுபவத்தைத் தருவது இந்தக் கண்காட்சியின் சிறப்பு.

கூடவே, இயற்கையுடன் உரையாடுவோம் எனும் எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. சென்னை போட்டோ பியனைல், டபிள்யூடபிள்யூஎஃப் இண்டியா இணைந்து நடத்தும் இக்கண்காட்சி வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT