கேரளத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது திருமால் தொடர்புடைய ஓணம் பண்டிகை.
கேரள மக்களின் வாழ்க்கையில் மற்ற மாநிலங்களைவிட யானைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
தமிழகத்திலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது என்பதை திருமாலையும் யானைகளையும் கருப்பொருளாகக் கொண்டு, பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியில் உள்ள வரிகள் உணர்த்துகின்றன.
‘கணம் கொள் அவுணர் கந்த பொலத்தார் மாயோன் மேய ஓண நல்நாள்...''கருங்களிரு ஓட்டலின் காணுநர் இட்ட நெடுங்கரை’ அதாவது, அசுரரை வென்ற திருமால், திருவோணமாகிய நல்ல நாளில் பிறந்தார்.
அந்நாளைக் கொண்டாடிய மறவர் யானைப் போர் காண விரும்பி, களிறுகளை மோத விட்டனர். யானைப் போரைக் காண்போரின் பாதுகாப்புக்காகக் கரை அமைத்திருந்தனர் என்பதாகும்.
தமிழகத்தில் வேர்விட்ட ஓணம் விழா, எந்தக் காரணத்தினாலோ இங்கு வழக்கில் இல்லாது போக, நம் கேரளத்துச் சகோதர, சகோதரிகள் அதைக் கொண்டாடுவது நமக்கும் பெருமையே!
- கொங்குநாடன், கோவை.