நம்மைச் சார்ந்தவர்களுக்கு நாம் இருக்கும் பொழுதும் மறைந்த பிறகும் முழு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது கடமை. அதிலும் நிதி பாதுகாப்பை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். அதற்காகத்தான் சம்பாதித்த பணத்தை காப்பீடு, சிறு சேமிப்பு, பங்குச் சந்தை, தங்கம் என அனைத்து வகைகளில் சேமித்து வருகிறோம். காப்பீடு எடுக்கும் போது பாலிசி எதற்கானது என்பதே பலபேருக்கு தெரிவதில்லை. யாரோ சொன்னால் கேட்டுவிடும் மனநிலைதான் நம்முடையது. ஆயுள் காப்பீடு எடுப்பவர்கள் இதில் கவனமுடன் இருக்க வேண்டும். நம் தேவை என்ன, எத்தனை வருடம் இந்த பாலிசி காலம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு எடுக்க வேண்டும்.
சிறு வயதில் காப்பீடு பாலிசி எடுத்தால்தான் அது சிறந்த பயனைத் தரும். அதுமட்டுமல்லாமல் சிறு வயதில் பாலிசி எடுக்கும் போது உங்களது பிரீமியம் தொகை குறைவாக இருப்பதுடன் உங்கள் பாலிசி காலம் முழுவதும் பிரீமியம் தொகையும் ஒரே மாதிரியாக இருக்கும். அதிகபட்சம் 40 வயது வரை ஆயுட் கால பாலிசிகளை எடுக்க முடியும். நீங்கள் 25 வயதில் பாலிசி எடுத்தால் 65 வயது வரை பாலிசி காலம் இருக்கும். இருப்பினும் ஒவ்வொரு ஐந்து வருடத்திலும் உங்களது பாலிசியை மறு பரிசீலனை செய்யலாம்.
அதாவது உங்களது ஆண்டு வருமானத்தை 20 மடங்கு பெருக்கினால் வரும் தொகைக்கே பாலிசி தொகை வழங்கப்படும். எப்பொழுதும் உங்களது முதலீட்டு திட்டத்தையும் காப்பீட்டு திட்டத்தையும் தனித்தனியே வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் சேர்த்து செய்ய வேண்டுமென்றால் மணிபேக் திட்டம், என்டோவ்மென்ட் திட்டம் போன்ற பழைய திட்டங்களை காட்டிலும் யுலிப் (யூனிட் லிங்டு காப்பீட்டுத் திட்டங்கள்) சிறந்தது.
இளைஞர்களுக்கு
நீங்கள் தற்போதுதான் பாலிசி எடுக்க போகிறீர்கள் என்றால் இணையதளத்தில் பல்வேறு நிறுவனங்களின் பாலிசி தொகை அதற்கான பிரீமியம் தொகையையும் ஒப்பிட்டு பார்த்துவிடுங்கள். ஏகன் லைப் ஐ-டேர்ம், பியூச்சர் ஜெனரலி பிளக்ஸி ஆன்லைன் டேர்ம், டாடா ஐ-ரக்ஷா சுப்ரீம், எடெல்வைஸ் டோக்யோ டோட்டல் செக்யூர் பிளஸ் போன்ற பாலிசிகள் மிகக் குறைவாக உள்ளன. அதிகபட்சமான காலக்கட்டத்தை வழங்கும் நிறுவனத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இருப்பினும் இழப்பீடு தொகையை வழங்குவதில் எல்ஐசி, மேக்ஸ் லைப், ஐசிஐசிஐ புரூடென்ஷியல், ஏஜியான் லைப், ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் போன்ற நிறுவனங்கள் சிறந்தவையாக உள்ளன. இந்த நிறுவனங்கள் 2015-16-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 95 முதல் 98 சதவீதம் வரை இழப்பீட்டை வழங்கியுள்ளன.
எடெல்வைஸ் டோக்யோ டோட்டல் செக்யூர், ஐடிபிஐ பெடரல் பிளக்ஸ் டேர்ம் மற்றும் ஏஜியான் லைப் போன்ற சில நிறுவனங்கள் பாலிசி திட்டங்களின் காலம் 62 வயது வரை வழங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் பாலிசி அதிகபட்ச காலம் 80 வயது. 30 வயதை கடந்தவர்கள் 1 கோடி ரூபாய்க்கு பாலிசி எடுத்தால் 8,000 ரூபாய் முதல் 9,500 ரூபாய் வரை ஆண்டு பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கும்.
புகைபிடிப்பவர்களுக்கு
சிகரெட், புகையிலை மற்றும் மற்ற புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கென காப்பீட்டு நிறுவனங்கள் ஸ்மோக்கர்ஸ் என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளன. புகைபிடிப்பவர்கள் லைப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கும்போது பிரீமியம் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். உதாரணமாக புகைபிடிக்கும் பழக்கம் உடைய 40 வயதுள்ள ஒருவர் 1 கோடி ரூபாய்க்கு லைப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்தல் பிரீமியம் தொகை வருடத்திற்கு ரூ.23,000 லிருந்து ரூ.27,000 வரை வரும். இதே தொகைக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர் எடுக்கும் போது வருடத்திற்கு பிரீமியம் தொகை ரூ. 13,000 லிருந்து ரூ.14,000 வரை மட்டுமே வரும்.
அதுமட்டுமல்லாமல் பாலிசி எடுக்கும் போது சிலர் தாங்கள் புகைபிடிப்பதை மறைத்து விடுவர். அவ்வாறு மறைத்து பின்பு பாலிசி தொகை கோரும் போது புகைபிடிப்பது கண்டுபிடிக்கப் பட்டால் உங்களது இழப்பீடு ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதனால் பிரீமியம் தொகை குறையும் என்பதற்காக அதை ஒருபோதும் மறைத்து விடாதீர்கள்.
சமீபத்தில் பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சமீபத் தில் ஆன்லைன் டேர்ம் பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் புகை பிடிப்பவர்களுக்கு பிரீமியம் தொகை குறைவாக உள்ளது. இதுபோன்று பிற நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
40 வயது மேல் உள்ளவர்களுக்கு
தற்போதைய நிலவரப்படி 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் 20 சதவீத பாலிசி எடுக்கிறார்கள். இந்த வயதுடையவர்களின் பிரீமியம் தொகை 30 வயதுடையவர்கள் செலுத்தும் பிரீமியத்தை விட அதிகமாக இருக்கும். ஆனால் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்கு இது மிக முக்கியமானது ஆகும். 60 வயதைக் கடந்தவர்கள் ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பதை விட மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை எடுக்கலாம்.
- rajalakshmi.nirmal@thehindu.co.in