‘டெஸ்லா’ எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளில் உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் தற்போது சீனாவில் 5 பில்லியன் டாலர் முதலீட்டில் தனது எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியில் டெஸ்லா அமைக்கும் முதல் ஆலை இது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை நிறுவும் முயற்சிகளைக் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்லா எடுத்து வருகிறது. ஆனால், இந்திய அரசு வேகம் காட்டாமல் இருந்தது.
இதனை டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கான சந்தை இன்னமும் உருவாகவில்லை. இந்தியாவில் மொத்தமே 6000 எலெக்ட்ரிக் கார்கள் தான் விற்பனை ஆகியிருக்கின்றன. ஆனால், சீனாவில் 13 லட்சத்துக்கும் மேலான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆகின்றன. எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் இந்திய அரசும் இறங்கியுள்ளது.
ஆனால், அறிவிப்பு விடுத்ததோடு சரி, அடுத்த கட்ட முன்னேற்றங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களும் மிக மிகக் குறைவாகவே உள்ளன. இந்நிலையில், தற்போது இந்தியாவில் 2019-க்குள் டெஸ்லா தடம் பதிக்கும் என எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் மீதும் அதன் தயாரிப்புகள் மீதும் எல்லோருக்குமே ஒரு ஈர்ப்பு உண்டு. எனவே, இந்தியாவில் எலெட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிப்பதில் டெஸ்லா வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம்.