உயிர் மூச்சு

கடலம்மா பேசுறங் கண்ணு 17: என்னோடு போகட்டும்

வறீதையா கான்ஸ்தந்தின்

"கடந்து வந்த பாதையைப் பார்த்தால் பிரம்மிப்பு அடங்கவில்லை இன்னும். எப்படி நடந்தது இது? என் அப்பா அதிகம் பேசமாட்டார். உலக ஞானமோ, வாய்ச்சவடாலோ, நிலபுலன்களோ, துணை வருவாயோ எதுவும் இல்லாமல் வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருந்த அந்த சாதாரண மனிதருக்குள், இப்படியொரு பெரிய கனவு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்திருக்கிறது. ‘எப்பாடு பட்டாவது என் மக்களை படிக்கவைத்து ஆளாக்குவேன். கடலில் படுகிற கஷ்டங்களெல்லாம் என்னோடு போகட்டும்’ என்பது அவரது மந்திரமாக இருந்தது.

அவருடன் தொழிலுக்குப் போக சக மீனவர்கள் விருப்பம் கொண்டார்கள். கடின உழைப்பாளியான அவர் ஜெபம் செய்வதை மட்டும் நிறுத்தியதில்லை. குடிப்பழக்கம் இல்லாமல் மீனவன் கடலில் உழைக்க முடியாது, கடல் வருவாயை நம்பி மீனவனால் பிள்ளைகளுக்கு உயர்கல்வி கொடுக்க முடியாது என்பது போன்ற புராதன நம்பிக்கைகளை உடைத்தெறிந்த சாதாரண மனிதர் அவர். அப்பா தனது கனவில் உறுதியாக இருந்தார். தொடர்ந்து உழைத்தார். ஆலமரமாக ஒரு குடும்பத்தை வளர்த்துவிட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்துவிட்டார் அந்த மனிதர்.

"இந்தக் கடனை நாங்கள் எப்படி அடைப்போம்? வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு வாய்ச்சவடாலும் ஏமாற்று வித்தையும் தேவையில்லை. கடின உழைப்பும் மனஉறுதியும் கடவுள் நம்பிக்கையும் போதுமானது என்று எங்களுக்குக் கற்றுத் தந்த அந்தப் பாமர மீனவனுக்கு என்ன கைமாறு செய்வோம்?"

- இது ஒரு கடற்கரைப் பேராசிரியரின் மனம் திறந்த பகிர்வு. கல்லூரியில் நாங்கள் இருவரும் ஏறத்தாழ ஒரே காலத்தில் வேலைக்குச் சேர்ந்தோம். அவர் இரவில் அப்பாவுடன் மீன்பிடிக்கப் போய்விட்டுக் காலையில் கரைக்கு வந்து குளித்துவிட்டுக் கல்லூரிக்கு வருவார். சில பொழுதுகளில் அவர் தனியாளாகப் போவதும் உண்டு. கடற்கரையில் தேடினால் இதுபோல ஆங்காங்கே பல பெற்றோர்களின் தியாக வரலாறுகளைத் தூசுதட்டி எடுக்கலாம்.

அறுபதுகள்வரை மீனும் மரவள்ளிக் கிழங்கும்தான் தென்திருவிதாங்கூர் கடற்கரைக் கிராமங்களில் முதன்மை உணவு. இறாலுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் கிராக்கி வந்த பிறகுதான், கடற்கரையில் வருவாய் பெருகியது. வாகன வசதி பெருகிய காலத்தில் தொலைவுச் சந்தைகளிலும் மீனுக்குக் கிராக்கி வந்தது. தொடர்ந்து தோட்டுக்கணவாய்க்கு (Cuttle fish) ஜப்பான் முதலிய நாடுகளில் கிராக்கி வந்தது. இவையெல்லாம் வெறும் 50 வருட மாற்றங்கள்.

(அடுத்த வாரம்: பாடங்கள் பெரிது)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

SCROLL FOR NEXT