‘முரட்டுக் காளை’ படத்தில் வரும் ‘அண்ணனுக்கு ஜே காளையனுக்கு ஜே’ பாடல் ஜல்லிக்கட்டு, பொங்கல் சார்ந்த நினைவுகளைக் கிளறிவிடக் கூடியது. ஆனால், பெரும்பாலான திரைப்படங்களில் காட்டுவதுபோல, உண்மையான ஜல்லிக்கட்டில் யாரும் மாட்டின் கொம்பைப் பிடித்து அடக்குவதில்லை, ‘பாகுபலி’யைப் போல ஒரே அடியில் அடித்து வீழ்த்துவதும் இல்லை. ஜல்லிக்கட்டு என்பது மாட்டின் திமிலை 30 விநாடிகளுக்குப் பிடித்துத் தழுவிச் செல்வதுதான். அதனால்தான் பண்டைக் காலத்தில் ‘ஏறு தழுவுதல்‘ எனப்பட்டது. இந்த இடத்தில் ஏறு எனப்படுவது காளைதான். நம் நினைவுகளில் சுழன்றாடும் ஜல்லிக்கட்டு சார்ந்த ஓவியம், சிற்பம், காணொளி குறித்த சிறு தொகுப்பு:
சங்க இலக்கியத்தில் ஏறு தழுவுதல்
பண்டைக் காலத்தில் ஆயர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து மாட்டைக் காக்க வேண்டிய இருந்தது. பகைவரின் தாக்குதலுக்கு முதலில் உட்படுவதும் ஆயர்கள் வாழ்ந்த பகுதியே. அதனால் அவர்கள் வீரம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாகவே ‘ஏறு தழுவுதல்’ உருவாக்கப்பட்டது. ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும் காளைகளைத் தழுவி அடக்குதல். நல்லுருத்திரன் பாடிய முல்லை கலித்தொகைப் பாடல்கள் ஏறு தழுவல் காட்சிகளை விரிவாகக் கூறுகின்றன. குறிப்பாக 105-ம் பாடல்.
திரைப்படங்களில்...
ஜல்லிக்கட்டைக் காட்சிப்படுத்திய பிரபலத் திரைப்படங்கள்:
முரட்டுக்காளை
சேரன் பாண்டியன்
ராஜகுமாரன்
விருமாண்டி
அரவான்
பாகுபலி
(அதேநேரம் களத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை இந்தப் படங்கள் நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தவில்லை என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்)
எல்லிஸ் டங்கனின் காட்சி ஆவணம்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் எல்லிஸ் டங்கன், அந்தக் காலத் தமிழகத்தை ஆவணப்படுத்தியுள்ளார். ‘Inside India: Village Life in Southern India’ என்ற இந்த ஆவணப்படம் மேற்கு வர்ஜீனியா மாகாண ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் இறுதிப் பகுதியில் ஜல்லிக்கட்டு (நிஜ ஏறு தழுவுதல்) காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அரிய காட்சி ஆவணத்தைக் காண:
</p><p xmlns=""><img src="https://static.hindutamil.in/hindu/uploads/common/2017/01/13/6_3117441a.jpg"></p>