தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் திட்ட இயக்குநர். பத்திரிகையில் செய்தி சேகரிப்பாள ராகப் பணியாற்ற இதழியல் படித்திருக்க வேண்டுமா அல்லது யார் வேண்டுமென்றாலும் செய்தி சேகரிப்பாளராகப் பணிபுரிய முடியுமா? - மா. கல்பனா பழனி, தருமபுரி.
பொதுவாக, செய்தி சேகரிப்பாளர் பணிக்குத் தகுந்த அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப இத்துறையில் உங்களின் திறன்களை வளர்த்துக்கொண்டு வேலை தேடினால் தகுந்த பலன் கிடைக்கும்.
இந்தத் துறைசார் திறனை வளர்க்க, இணைய வழியில் கட்டணமில்லாமலும் கட்டணத்துடனும் வழங்கப்படும் சிறப்புப் படிப்புகளைப் படிக்கலாம். மிஷிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டி, பென்சில்வேனியா யுனிவர்சிட்டி இரண்டும் பிரபலமான அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்.
கோர்செராவில் (Coursera) இந்த இரண்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும் இதழியல் படிப்புக்குக் கட்டணம் உண்டு. இது போல எட்எக்ஸ் (EdX) தளத்தில், எதிர்காலப் பத்திரிகைத் துறை (Future Journalism) என்கிற படிப்பை கேப் டவுன் பல்கலைக்கழகமும், பெர்க்லி பல்கலைக்கழகமும் வழங்குகின்றன.
இவை தவிர ‘ஸ்வயம்’ தளத்தின் மூலம் கட்டணமில்லாமல் இணையவழியில் சில படிப்புகளைப் படிக்கலாம். இத்தளத்தில் 15 வாரப் படிப்பாக அச்சு - காட்சி இதழியல், 12 வாரப் படிப்பாக ரிப்போர்ட்டிங் அண்ட் ஆங்கரிங் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இதில் ஒளிப்பட இதழியல், தகவல் சேகரிப்பு, எடிட்டிங், இதழியல் தரம், எண்ணிலக்க யுகத்தில் இதழியல் (Digital era) ஆகிய பாடங்கள் கற்றுத் தரப்படும்.
இதைப் படித்து முடித்துவிட்டு உரிய சான்றிதழ் தேவை என்றால் கட்டணம் செலுத்திப் பெறலாம். இது அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ். இதை வைத்துப் பணி வாய்ப்பைத் தேடினால் உங்களின் இதழியல் ஆசை நிறைவேறக்கூடும்.