சென்னையைச் சேர்ந்த மாணவி நேத்ரா குமணன், ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். ஒலிம்பிக் படகுப் போட்டிக்குத் தகுதிபெறும் முதல் இந்தியப் பெண் இவர். 2020 உலகக் கோப்பை பாய்மரப் படகுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் இவர்.
தேர்வு முடிவு தள்ளிவைப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவிருந்த பருவத் தேர்வுகளை கரோனா தொற்றுப்பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவில்லை. அதை இணையம்வழியாக மார்ச் மாதம் நடத்தியது. அதில் 30,000 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
மன அழுத்தத்தைக் கண்டறியும் கருவி
கான்பூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் அசித் திவாரி, மன அழுத்தத்தைக் கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கியுள்ள கருவியில் கைவிரலை வைத்தால் மன அழுத்தம் இருந்தால் சிவப்பு விளக்கு ஒளிரும். இது ஆரம்ப நிலை கண்டறியும் கருவிதான். இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.
தேசிய அளவில் தகுதி
ஏற்காட்டில் 7 பிரிவுகளில் நடந்த மாநில வில்வித்தைப் போட்டியில் மயிலாடுதுறை மாணவர்கள் 19 பேர் வெற்றிபெற்று தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர். இந்தப் போட்டி அடுத்த மாதம் கர்நாடகத்தில் கூர்க்கில் நடைபெறவுள்ளது.