திசைகாட்டி

கொட்டிக்கிடக்கும் மருத்துவத் துணைப்பணி வாய்ப்புகள்!

யுகன்

கோவிட் 19 பெருந்தொற்று உலகையே புரட்டிப்போட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு குடும்பமும் உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகளை சந்தித்துவருகிறது. மாணவர்கள் கல்வி சார்ந்த இழப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர். அதே வேளை மருத்துவம், அறிவியல் படிப்புகளை சார்ந்து தங்களின் கனவுகளை வளர்த்துக்கொண்ட மாணவர்கள் அது சார்ந்த டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் கவனம் செலுத்தினால் குறுகிய காலத்தில் பணிவாய்ப்புகளைப் பெறலாம். அப்படிப்பட்ட சில மருத்துவத் துணைப்பணிப் படிப்புகள் குறித்த விவரங்களும் பணிவாய்ப்புகளும்:

முதியோர் நலன் பாதுகாப்பு

இந்தியர்களின் சராசரி ஆயுள் 60ஐ கடந்திருக்கிறது. அதனால் முதியோர் பராமரிப்பை உறுதிசெய்யும் மருத்துவர்களின் தேவை அதிகரித் திருக்கிறது. குழந்தைகள் நல மருத்துவரை பீடியட்ரிஷன் என்று அழைப்பதுபோல், மூத்தோர் நல மருத்துவரை ஜிரீயட்ரிஷன் என்று அழைக்கின்றனர். முதியோர் நலன் சார்ந்த படிப்பு இன்றைக்கு பரவலாகிவருகிறது.

முதியோர் தங்களுடைய வாழ்நாளை ஆரோக்கியத்துடன், தங்களுடைய பணிகளை தாங்களாகவே மேற்கொண்டு உடல், மன ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு அவர்களைத் தயார்ப் படுத்துவதற்கான பயிற்சிகளை கற்றுத் தரும், டிப்ளமோ படிப்புகளை மாணவர்கள் படிக்கலாம். தனியார் மருத்துவமனைகள் தொடங்கி குடும்பத்தில் நேரடியாக முதியவர்களைப் பராமரிப்பதற்கும் இத்தகைய படிப்புகளை முடித்த ஜிரீயட்ரிக் கேர் ஊழியர்களின் தேவை இன்றைக்குப் பெருகிவருகிறது.

ஆப்டோமெட்ரிஸ்ட்

கண் மருத்துவருக்கு உதவும் பணி இது. கண் பார்வை திறனைக் கண்டறி வதற்கும், அதை கண் மருத்துவருக்குத் தெரிவிப்பதற்கும், மருத்துவ உதவி செய்வது உள்ளிட்ட பணிகளை கொண்டது. இதற்கான பயிற்சிகள் புகழ்பெற்ற கண் மருத்துவமனைகளிலேயே வழங்கப் படுகின்றன. மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் தொடங்கி, கண் கண்ணாடி விற்பனை செய்யும் இடங்களில்கூட இவர்களுக்கான தேவைகள் உண்டு.

செவிலி உதவியாளர்

மருத்துவமனைகளில் செவிலி யர்களுக்கு உதவும் பணிகளை வார்டு பாய் என்பவர்கள் செய்வார்கள். நோயாளிகளின் படுக்கைகளை அன்றாடம் மாற்றுவது தொடங்கி, அவர்களை அறுவைசிகிச்சை அறைக்குக் கொண்டுசெல்வது, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை எடுப்பதற்கு அழைத்துப்போவது போன்ற பணிகளை செய்வார்கள். உடல்நலம், மனநலம் சார்ந்த சிகிச்சையில் இவர்களுக்கான பணிகளைக் கற்றுத்தரும் ஓராண்டு டிப்ளமோ படிப்புகளும் இருக்கின்றன. படிப்புக்குப் பிறகு ஓராண்டு பணிப்பயிற்சி முடித்தவுடன் வேலை தேடலாம்.

பிசியோதெரபிஸ்ட்

முதியோர், விளையாட்டு வீரர்கள் தொடங்கி இன்றைக்கு சிறுசிறு உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளைக் களைவதற்குப் பயிற்சி வழங்குபவர்களாக உடலியக்கப் பயிற்சியாளர்கள் உள்ளனர். இவர் களுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. மூன்றாண்டுப் படிப்புக்குப் பிறகு, தகுந்த நிபுணரின்கீழ் ஓராண்டு பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு பணி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தனியாக சிகிச்சை மையம் தொடங்கலாம். மருத்துவமனைகள், உடற்பயிற்சிக் கூடங்களிலும் பணி வாய்ப்பு கிடைக்கும்.

பேச்சுப் பயிற்சியாளர்கள்

காது கேளாதவர்கள், பேசமுடியாத வர்கள் கை அசைவுகளைக் கொண்டு தங்களுடைய எண்ணங்களைப் புரியவைக்கும் சைகை மொழி, பேச்சுப் பயிற்சி வழங்கும் நிபுணராக ஓராண்டு டிப்ளமோ படிப்பின் மூலம் தயாராகலாம். இந்தக் குறைபாடுகளைக் கொண்டிருப்பவர்களுக்கு பயிற்சி அளிப்பவராகப் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

SCROLL FOR NEXT