சொந்த வீடு

வீட்டைப் பார்த்துக் கட்டுவோம்

அனாமிகா

இன்றைக்குப் பெரும்பாலும் வீடு கட்ட நினைக்கும் பலரும் நாடுவது ஒப்பந்த முறையைத்தான். கட்டுநரிடம் பணியை ஒப்படைத்தாகிவிட்டதே எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என ஒதுங்கிவிடுவார்கள். ஆனால், கட்டுமானப் பணியின்போது நம் தலையீடும் கண்காணிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும்.

அதனால் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் கட்டிடப் பணிகளைப் பார்வையிட்டு ஆலோசனை வழங்க வேண்டும். வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், வர்ணம் என ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

வீட்டின் பகுதிப் பொருள்களின் நாம் கவனம் செலுத்துவதுபோலக் கட்டுமானக் கலவையில் கலக்கப்படும் தண்ணீரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு கலந்துள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெல்ல அரிமானத்துக்கு உள்ளாகும். அதனால் குடிநீரில் வீடு கட்ட வேண்டுமா என நினைக்க வேண்டாம். அதிகம் உப்பு கலக்காத தண்ணீராக இருப்பது அவசியம். முடிந்தால் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரைப் பரிசோதித்துப் பார்த்து அது கட்டுமானத்துக்கு உகந்ததா எனப் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.

கட்டுமானப் பொருள்கள் வாங்குவதைப் பெரும்பாலும் கட்டுநர்களே முடிவெடுப்பார்கள். நிறுவனங்களை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள். கட்டுநர் எந்த நிறுவனத்தைப் பரிந்துரைத்தாலும் தரத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

சிமெண்ட்டின் தரம்

அடுத்ததாக சிமெண்ட். கட்டிட வலுவுக்கு சிமெண்ட்டின் தரம் அவசியம். சிமெண்ட் தரமானதா என்பதை அதன் நிறத்தைப் பார்த்தே கண்டறிய முடியும்.லேசான பசுமை நிறத்தில் இருந்தால் அது தரமான சிமெண்ட். சிமெண்ட் மூட்டைக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்கும். அப்படி இருந்தால் அது நல்ல சிமெண்ட்.

இதேபோலத் தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்டைப் போடும்போது அது மிதந்தால் தரமற்றது. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். சிமெண்ட் மூட்டையை வாங்கும்போது ரேண்டமாக மூட்டைகளின் அளவீடுகளைச் சரிபார்க்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை இருந்தால் அனுமதிக்கலாம். அதற்கு மேல் வேறுபாடு இருந்தால், விசாரிப்பும் கண்காணிப்பும் அதிகம் தேவை.

SCROLL FOR NEXT