மனை வாங்க முடிவு செய்துவிட்டீர்களா? மனையை வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்கு முன்பாக நிறைய விஷயங்களை ஆலோசிக்க வேண்டியிருக்கும். குறிப்பாகச் சொத்துக்குரிய ஆவணங்களைச் சரி பார்ப்பது மிகவும் முக்கியம். அப்படி என்னென்ன விஷயங்களை, ஆவணங்களைப் பார்க்க வேண்டும், ஆலோசிக்க வேண்டும்?
மனை வாங்கப் போகிறீர்கள் என்றால், முதலில் மனைக்குரிய பட்டாவின் நகலை வாங்கிப் பார்க்க வேண்டும். பட்டா என்பது குறிப்பிட்டச் சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைக் குறிக்கும் ஒரு முக்கியமான ஆவணம். பட்டாவோடு நின்றுவிடக் கூடாது. சிட்டா, அடங்கல் ஆகியவற்றையும் கவனமாக ஆராய வேண்டும். இதில் சிட்டா என்பது நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு யாருடைய கட்டுப்பாட்டில் நிலம் உள்ளது என்பதைக் காட்டும் ஆவணம். அடங்கல் என்பது நிலத்தின் பரப்பு, பயன், கிராமத்தில் குறிப்பிட்ட எந்த இடத்தில் உள்ளது என்பதைச் சொல்லும் ஆவணம். இந்த ஆவணங்களை ஆராய வேண்டும்.
மனையை யாரோ ஒருவரிடம் இருந்துதான் உங்கள் பெயருக்கு மாற்றி வாங்குவீர்கள் அல்லவா? அந்த மனையை விற்கிறவர் யாரோ, அவர் பற்றிய விவரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். விற்பவர் பெயரில்தான் மனை இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக ஈ.சி. எனப்படும் வில்லங்கம் என்ற ஆவணத்தை வாங்கிப் பார்க்க வேண்டும். வில்லங்க ஆவணத்தை ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் எடுத்து பார்க்கக் கூடாது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் வில்லங்க ஆவணத்தை வாங்கிப் பார்த்தால்தான் சொத்து யார்யார் பெயருக்கு மாறி வந்திருக்கிறது என்பது தெரியும்.
கடைசியாக, இப்போது மனையை விற்பவர் பெயர் அதில் இருக்கிறதா என்பதையும் அறிந்துகொள்ள முடியும். மேலும் மனை அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் வில்லங்கம் எடுத்துப் பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இந்த ஆவணத்தின் மூலமாகவோ ஒருவர் தவறாகவோ அல்லது போலி ஆவணம் மூலம் மனையை விற்கவில்லை என்பதையும் உறுதி செய்துகொள்ள வழி ஏற்படும்.
ஒரு காலத்தில் விளை நிலங்களில் இருந்த நிலங்கள் எல்லாம் இன்று விலை நிலங்களாக மாற்றப்படுகின்றன. எனவே விளை நிலங்களைப் புதிது புதிதாக மனைகள் லே-அவுட் போட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற மனைகளை வாங்கும்போது விளைநிலத்தை மனைகளாக மாற்ற முறையாக அனுமதி வாங்கப்பட்டிருக்கிறதா என்பதை தவறாமல் கவனிக்க வேண்டும்.
மனை லே-அவுட் நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (டி.டீ.சி.பி.) அனுமதியைப் பெற்றிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். டி.டீ.சி.பி. அனுமதி மிகவும் நல்லது. ஒரு வேளை மனை குறைந்தபட்ச அளவில் இருந்தால் பஞ்சாயத்து அனுமதியை வாங்கி இருப்பார்கள். குறைந்த விலையில் மனை கிடைக்கிறது என்பதற்காக அனுமதி விவரங்களைக் கவனிக்காமல் வாங்கினால் பின்னர் பிரச்சினையாகிவிடும். பிற்காலத்தில் மனையில் வீடு கட்ட வங்கிக் கடன் பெற விரும்பினால் இந்த அனுமதி மிகவும் முக்கியம்.
இதோடு ஆவணங்களைப் பார்க்கும் படலம் முடிந்துவிடுவதில்லை. நிலம் எந்த வகையயைச் சேர்ந்தது என்பதை ஆராய்ந்து அதற்கு தகுந்த ஆவணங்களையும் பார்க்க வேண்டும். பொதுவாக வீடுகள் உள்ள குடியிருப்புப் பகுதிகளை நத்தம் என்று அழைப்பார்கள். இதில் நத்தம் என்றும், நத்தம் புறம்போக்கு என்றும் இரண்டு வகைகள் உள்ளன. புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டோ அல்லது வீடு கட்டியோ வசித்துவந்தால் அந்த இடத்திற்குரிய அனுபவ பாத்தியதை அடிப்படையில் நத்தம் பட்டா ஆவணம் கொடுப்பார்கள்.
அந்தப் பட்டா உண்மையான பட்டாவா என்பதையும் சரி பார்க்க வேண்டும். இந்தப் பட்டாவோடு, மின் இணைப்பு ரசீது, வீட்டு வரி ரசீது ஆகியவையும் மனை விற்பரின் பெயரில் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு வேளை இந்த ஆவணங்கள் இல்லாவிட்டால், மற்ற ஆவணங்கள் இருந்தும்கூட சொத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை மறக்க வேண்டாம்.