சொந்த வீடு

கவனம்: பத்திரப் பதிவுத் தொகை

செய்திப்பிரிவு

வீட்டு மனை வாங்குபவர்கள் மனை வாங்கும் போது பத்திரப்பதிவுக்கான தொகை விஷயத்தில் அவ்வளவாகக் கவனம் கொள்வது இல்லைதான். நில பிரமோட்டர்கள் குறிப்பிடும் தொகை அரசு வழிகாட்டி மதிப்பு மற்றும் பத்திரச் செலவு போன்றவற்றைக் கணக்கிட்டு பத்திரச்செலவுக்காகக் கொடுக்கும் தொகை நியாயமானதா என்பதைக் கவனிக்க வேண்டும். பிரமோட்டர்கள் கேட்கும் தொகை மிக அதிகமாக இருந்தால், ஏன் இவ்வளவு தொகை என்று கேட்கத் தயங்கக் கூடாது.

பத்திரப் பதிவு செலவில் மக்கள் ஏமாறும் இன்னொரு இடம் உள்ளது. அது புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குவது. பத்திரச் செலவு 3 லட்சம் அல்லது 4 லட்ச ரூபாய் ஆகும் என்று கட்டுநர்கள் சொல்லி விடுவார்கள். ஆனால், உண்மையில் அவ்வளவு பணம் செலவாகுமா என்பது கேள்விக்குறிதான். புதிய ஃபிளாட் என்றால் பிரிக்கப்படாத மனையின் (யூ.டி.எஸ்.) அரசு வழிகாட்டி மதிப்புக்கு மட்டும்தான் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு இடத்தில் எத்தனைக் குடியிருப்புகள், எவ்வளவு காலி இடம் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான இடம் உள்ளது என்பதைப் பொறுத்து யூ.டி.எஸ். அளவு இருக்கும். வீட்டின் சதுர அடி பரப்பு ஆயிரக்கணக்கில் இருக்கும்போது யூ.டி.எஸ். அளவு நூற்றுக்கணக்கில்தான் வரும்.

இந்த விவரம் தெரியாமல் பலரும், மொத்த விலைக்கு என நினைத்துப் பில்டர் கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுவார்கள். இப்படி ஏமாறாமல் இருக்கவேண்டும் என்றால், யூ.டி.எஸ். எவ்வளவு என்று பார்த்து, மனையின் சதுர அடி மதிப்பைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT