விபா ராணி என்னும் நாடக ஆசிரியர் இந்த ஆண்டுக்கான ‘நேமி சந்திர ஜெயின்’ சிறந்த நாடக ஆசிரியருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். ‘பிரக்னன்ட் ஃபாதர்’ (Pregnant Father) என்னும் நாடகத்தை எழுதியதற்குத்தான் அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
எல்லாப் பெண்களும் வாழ்நாளில் ஒருமுறையாவது தங்களின் கணவனுக்குக் கர்ப்பம், பிரசவம் சார்ந்த வலிகள் என்ன என்பது தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த விருப்பத்தை நிறைவேற்றவே ‘பிரக்னன்ட் ஃபாதர்’ நாடகத்தை விபா ராணி எழுதியுள்ளார்.
“கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் உபாதைகளைத் தீர்க்க வேண்டுமானால் மருந்துகள் துணை இருந்தால் போதும். ஆனால், அவளுடைய மனத்தில் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டிய கணவன் தன் கடமையை, உணர்வுபூர்வமான ஆதரவை மனைவிக்கு அளிக்காதவனாகவே காலம் காலமாக இருக்கிறான். கல்வி கற்று சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஆண்களும் சரி, பாமரர்களாக இருப்பவர்களும் சரி, பிரசவ காலத்தில் தங்களின் மனைவிகளுக்கு ஆதரவாக ஒரு சதவீதத்தினரே உள்ளனர்.
சமூகத்தில் நிலவும் ஆண், பெண் சமத்துவமின்மையைத் தன்னுடைய இந்த நாடகத்தின் மூலம் கேள்விக்கு உட்படுத்துகிறார் விபா ராணி. நாடகத்தின் பாத்திரங்கள் பணியிடத்தில் ஆங்கிலமும் வீட்டில் மைதிலி என்னும் மொழியையும் பேசுபவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு.