எழுத்தாளரும் மூத்த பத்திரிகை யாளருமான ஐ. சண்முகநாதன் என் கணவருக்கு உறவினர் என்பதால், அவர் எழுதிய புத்தகங்களைத் தொடர்ந்து படித்துவந்தேன். அதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொண்டேன். மேலும், பள்ளிப் பருவத்திலேயே எனக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் இருந்தது. திருமணத்துக்குப் பிறகு அந்தப் பழக்கத்தை என் கணவர் நடத்திவந்த நூலகம் மூலம் வளர்த்துக்கொண்டேன். நாள்தோறும் வீட்டுக்கு வரும் செய்தித்தாள்களைப் படிப்பதன் மூலம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை அதிகரித்துக்கொண்டேன். என் கணவர் நடத்தி வந்த நூலகத்திற்கு ஓய்வு நேரத்தில் சென்று பல்வேறு மாத, வார இதழ்களைப் படித்தேன். அதன் மூலமாகப் பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் எழுதினேன்.
என்னைப் பார்த்து என்னுடைய தோழிகள் சிலரும் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டனர். பின்னர் அவர்களும் பத்திரிகைகளுக்கு எழுதினர். இன்று அவர்களும் சிறுகதை எழுத்தாளர்களாக ஜொலிக்கிறார்கள். எங்கள் நூலகத்துக்குச் சிறுவர்களும் பெரியோர்களும் பெண்களும் வந்து படிப்பார்கள். அதுவே எனக்கு மன மகிழ்ச்சியைத் தந்தது. அனைவரும் படிக்க வேண்டும் என்கிற எனது ஆவல், அந்த நூலகம் மூலம் நிறைவேறியது.
- எஸ்.விஜயராணி, தென்னூர், திருச்சி.
| புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |