வெப்பமண்டல நாடான நமது மண்ணில் தண்ணீர்ப் பந்தல் அமைத்துத் தாகம் தீர்ப்பது மிகப் பெரிய அறச்செயலாகத் தொடர்ந்துவந்துள்ளது. அந்தக் காலத் தண்ணீர் பந்தல்களில் தண்ணீர் மட்டுமல்லாது நீர்மோர், பானகம் (போர் வீரர்களுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதற்காக வழங்கப்பட்டது), சர்பத் போன்றவையும், தென் மாவட்டங்களில் பதநீர், தேநீர் போன்றவையும் வழங்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அதேபோல், கோயில் பாதயாத்திரை செல்பவர்களின் தாகம் தணிக்கத் தண்ணீரும் உணவும் வழங்குவதும் வழக்கம்.
தண்ணீர்ப் பந்தலுக்குத் தண்ணீர் இறைத்துத் தருபவருக்கும், அதை வழங்குவதற்குக் கலம் வடித்துத் தரும் குயவருக்கும், தண்ணீர் ஊற்றி வழங்குபவருக்கும் மானியம் வழங்கப்பட்டது குறித்து வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. சோழர் காலக் கல்வெட்டு ஒன்று இதைப் பற்றிக் குறிப்பிடுவதாக, தொ.பரமசிவன் குறிப்பிட்டுள்ளார்.
10, 20 ஆண்டுகளுக்கு முன்பு பொது இடங்களிலும் சில வீடுகளின் முன்புறமும் போவோர், வருவோர் அருந்துவதற்காக மண்பானையில் தண்ணீர் வைத்திருப்பார்கள். இப்போது இது அரிதாகிவிட்டது. சத்திரம், அன்னச் சத்திரம், பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சாவடி, திண்ணை, சுமைதாங்கிக் கல், மாடு உரசும் கல் உள்ளிட்ட இதுபோன்ற அனைத்து தர்ம காரியங்களும் பொதுப் பயன்பாட்டை மனதில் கொண்டு உருவானவையே.