அப்பா என்னை
அழைத்துச் சென்றார்,
அங்கு ஓரிடம்.
அங்கு இருந்த
குயிலும், மயிலும்
ஆடித் திரிந்தன.
சின்ன நரியும்
புனுகு பூனையும்
எல்லாம் நின்றன.
குட்டி மான்கள்,
ஒட்டகச் சிவிங்கி
கூட இருந்தன.
குரங்கு என்னைப்
பார்த்துப் பார்த்துக்
குறு குறு என்றது.
யானை ஒன்று
காதைக் காதை
ஆட்டி நின்றது.
முதலை தலையத்
தூக்கிப் பார்த்து
மூச்சு விட்டது.
கரடி கூட
உறுமிக் கொண்டே
காலைத் தூக்கிற்று.
சிறுத்தை ஒன்று
கோபங் காட்டிச்
சீறப் பார்த்தது.
அங்கு எங்கள்
அருகிலேயே
சிங்கம் நின்றது.
கரடி, சிங்கம்
புலியைக் கண்டேன்.
கண்டும் பயமில்லை!
சூரனைப் போல்
நின்று இருந்தேன்.
துளியும் பயமில்லை!
சென்ற அந்த
இடம் உனக்குத்
தெரிய வில்லையா?
விலங்கு காட்சி சாலை தானே,
வேறொன்றுமில்லை!