வந்தாரு... வந்தாரு...
எங்க ஆசான் வந்தாரு
பாடம் நடத்த வந்தாரு
பாட்டுப் பாடி நின்னாரு
பாட்டுப் பாடம் ஆனது
பாடம் நல்லா புரிஞ்சுது.
தமிழ் நடத்த வந்தவரு
கதையைச் சொல்லித் தந்தாரு
சொன்ன கதை எல்லாமே
செய்யுளின் பொருள் சொன்னது
செய்யுள நல்லா பாடியே
மனதில் பதிய வச்சாரு.
கோலி குண்டுகள் கொண்டுதான்
கூட்டல் கழித்தல் சொன்னாரு
வாழ்க்கைக் கணக்கைக் கொண்டுதான்
பெருக்கல் வகுத்தல் சொன்னாரு
எல்லாக் கணக்கும் செஞ்சதால
இனிப்பு மிட்டாய் தந்தாரு.
அறிவை வளர்க்கும் அறிவியல்
பெருமை சொல்லும் வரலாறு
அத்தனையும் நடத்தியதால்
அதிக மதிப்பெண் பெற்றோமே
வந்தாரு... வந்தாரு...
எங்க ஆசான் வந்தாரு !
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.