ஒருமுறை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் அண்ணல் காந்திஜியிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அவருடைய அத்தனை கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் காந்தியடிகள்.
கடைசியாக, “மிஸ்டர் காந்தி! தங்கள் நண்பர்கள் பற்றியும், அவர்களுடனான நட்பை பற்றியும் ஒரு தெளிவான விளக்கத்துடன் கூறமுடியுமா? உங்கள் பதில் நடைமுறைக்கு ஒத்துவரும் நிலையில் இருக்க வேண்டும். இதை நாட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால், அதிகளவில் நண்பர்களைப் பெறும் வழியை மக்கள் புரிந்துகொள்வார்கள். அதன்மூலமாக நாட்டில் ஒற்றுமையையும் வளர்க்க முடியும். சொல்லுங்கள் மிஸ்டர் காந்தி” என்று கேட்டார்.
அதற்கு அண்ணல் காந்திஜியோ, “நட்பைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாதே…!” என்றார். வெளிநாட்டு பத்திரிகையாளருக்கு ஒரே ஆச்சரியம்.
“அப்படியென்றல் உங்களுக்கு நண்பர்களே இல்லையா மிஸ்டர் காந்திஜி?” என்று வியப்போடு கேட்டார் அந்தப் பத்திரிகையாளர்.
“எனக்குப் பகைவர்கள் இல்லை. அப்படி இருந்தால்தானே நட்பின் பெருமை தெரியவரும். என் கண்ணில் படுகின்ற எல்லோரையும், என்னைப் போலவே நேசிக்கிறேன். அவர்களும் என்னை அப்படியே நேசிக்கிறார்கள்.” என்று அண்ணல் காந்தியடிகள் அந்தப் பத்திரிகையாளருக்குப் பதில் சொன்னார்.
வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஆச்சரியத்தோடு விடைபெற்று சென்றார்.
- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை