செங்குத்தான மலையின் மேலிருந்து கீழே எட்டிப் பார்த்தால் மேகக் கூட்டங்கள் மட்டும்தான் தெரிகின்றன. அங்கே சருகலான மரப்பலகையிலிருந்து தாவிக் குதிக்கிறது ஒரு பெரிய பறவை. ஆனால், அதனுடைய சிறகுகள் மட்டும் அசையவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால்தான் தெரிகிறது, ஹேங் கிளைடிங்கில் ஒரு பறவைப் போல் அநாயாசமாகப் பறந்துக்கொண்டிருக்கிறார் வோல்ஃப்கேங் சிஸ் (Wolfgang Siess) என்ற சாகச மனிதர்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த இவர், ஹேங் கிளைடிங் சாகச விளையாட்டில் ஆர்வமுடையவர். வெளிநாடுகளில் இந்த விளையாட்டு மிகப் பிரபலம். பொழுதுபோக்குக்காக விளையாடப்படும் இந்த விளையாட்டில் தனக்கெனத் தனி முத்திரைப் பதித்துள்ளார் வோல்ப்கேங்.
சுவிட்சர்லாந்தில் உள்ள மலைகளில் ஏறி வோல்ப்கேங் பறக்காத இடமே இல்லை எனும் சொல்லுமளவுக்குப் பறப்பதில் சாகசம் செய்திருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு வார இறுதி விடுமுறை தினத்தை வோல்ப்கேங் இப்படித்தான் செலவழிக்கிறார்.
ஹேங் கிளைடிங் விளையாட்டில் ஈடுபட்டுள்ள வோல்ப்கேங் ‘சிஸ் த ரிதம் ஆப் ஃபிளை’ என்ற நிறுவனத்தையும் நடத்திவருகிறார். திசைக்கு ஏற்றவாறு ஹேங் கிளைடிங்கில் திரும்புவதும், மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் என இவர் பறப்பதைப் பார்க்கும்போது மனது திக்திக்கெனத் துடிக்கிறது. ஆனால், இவரோ பறவையைப் போல அநாயாசமாகப் பறக்கிறார்.
இவர் பறப்பதைப் பார்க்கவே ஃபேஸ்புக், இன்ஸ்டிகிராம், யூடியூப் ஆகிய வலைத்தளங்களில் பல்லாயிரக்கணக்கில் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள்.