எதிர்கால இந்தியா முழுமையான வளர்ச்சி பெற இளைஞர்களின் பங்கு, முக்கியத்துவம் மிகுந்ததாகக் கருதப்படுகிறது. அதுபோல நல்ல அரசியல் சூழல் உருவாகவும் நாட்டுப்பற்றும் துணிச்சலும் மிக்க இளைஞர்கள் தேவை.
அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி, இந்து மேல்நிலைப்பள்ளியில் இயங்கிவரும் பாரதி சாரணர் குழுவைச் சேர்ந்த சாரணர்கள் தொடர்ந்து பல பொதுநலச் சேவைகளை செய்துவருகின்றனர்.
இந்த சாரணர் குழு சுதந்திரத் தினத்தை முன்னிட்டு ஊழல் ஒழிப்பைக் கருப்பொருளாகக் கொண்டு அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துரைக்க (RIDE TO DRIVE AWAY THE CORRUPTION- DON’T GIVE & DON’T GET) என்ற நோக்கத்தோடு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேத்துக்கும் சாரணர்கள் வாகனப் பேரணி மேற்கொண்டனர்.
சுமார் 1500 கி.மீ. தூரம் 6 சாரணர்கள் கொண்ட குழு பயணித்து, வழியெங்கிலும் மக்களைச் சந்தித்து ஊழல் ஒழிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி துண்டுப் பிரசுரம் வழங்கியுள்ளனர்.
“சமுதாயத்தில் எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைத்து இளைஞர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியம். தற்போது ஊழலை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஊழல் இல்லாத நாடே அதில் வாழும் மக்களுக்குப் பெருமை அளிக்கும். அதனால்தான் இந்தப் பயணம்,” என்று சாரணர்களான கோபாலகிருஷ்ணனும், ஸ்ரீகாந்தும் சொல்கின்றனர்.