இளமை புதுமை

பெருகும் ஃபங்கி கலாச்சாரம்!

மிது கார்த்தி

டை முதல் காலணிகள் வரை விதவிதமாக எதிர்பார்க்கும் இளைஞர்களிடம் தற்போது ஃபங்கி கலாச்சாரம் பிரபலமாகி வருகிறது. அதென்ன ஃபங்கி கலாச்சாரம் என்று யோசிக்காதீர்கள். கண்களைப் பறிக்கும் வகையிலான பளீர் வண்ண ஆடைகளுக்குத்தான் இந்தப் பெயர். இதன் மீதுதான் இளைஞர்களின் கவனம் திரும்பியுள்ளது.

வழக்கமாக பளீர் ரக ஆடைகளை அணிந்தால், ராமராஜன் ஸ்டைல் உடை எனக் கிண்டால் செய்வார்களே, அதுபோன்ற உடைதான் ஃபங்கி டிரெஸ். எப்படி ஒரு காலத்தில் ராமராஜன் மூலம் பளீர் ஆடைகள் பரிச்சயமானதோ, அதுபோலவே அண்மைக் காலமாக இந்த ஆடைக்கு மவுசுகூட, சினிமாக்கள்தான் காரணம்.

இந்த ஆடைகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக, எங்கும் தனித்து தெரிய வேண்டும் என்ற அவர்களின் இளமையின் துடிப்பே காரணம். அந்த வகையில் இந்த ஃபங்கி கலாச்சாரம் முதலில் ஆடையில் தொடங்கி இப்போது இளைஞர்கள் விரும்பி பயன்படுத்தும் பொருட்கள்வரை வந்துவிட்டன.

ஆப்பிரிக்க பாப் பாடகர் பாப் மார்லிதான் இந்த ஃபங்கி கலாச்சாரத்தை மேடைதோறும் தொடங்கிவைத்தார். அப்படி அவர் மேடைகளில் தனித்துவத்தோடு தெரிந்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். அது இளைஞர்களைக் கவர்ந்திழுக்கவே, பல இளைஞர்கள் இந்த ஆடைகளில் ஈர்ப்பு கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த ஃபங்கி கலாச்சாரம் முடிவில்லாமல், உலகை வந்துகொண்டிருக்கிறது. நம்மூரிலும்கூட இளைஞர்கள் பலர் ஃபங்கி கலாச்சாரத்துக்கு மாறிவருகிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து ஃபங்கி கலாச்சாரம் தற்போது வந்திருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஃபங்கி உடைகளின் குருநாதர் நடிகர் ராமராஜன்தான் என்பதை மறுக்க முடியுமா?

SCROLL FOR NEXT