இரண்டாம் உலகப்போரில் எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்த காட்சி ஒன்றுதான். இரக்கமேயில்லாமல் அங்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைதான். மீண்டும் இந்த உலகத்தில் நடக்கவே கூடாது என்று எல்லாரும் நினைத்துக்கொண்ட அந்த இனப்படுகொலை, மனிதர்களின் நினைப்பைப் பொய்யாக்கி மீண்டும் நடக்கத்தான் செய்தது.
ஒரு தவறிலிருந்து திருந்திவிடக்கூடியவர்களா இந்த மனிதர்கள்? செய்யக்கூடாத ஒரு விஷயத்தைச் செய்துவிட்டோம் என்று மாறிவிடக்கூடியவர்களா இந்த மனிதர்கள்?
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மனிதகுலத்திற்கு எதிரான இனப்படுகொலை என்கிற மன்னிக்க முடியாத செயல் ஐரோப்பாவின் சின்னஞ்சிறிய நாடான போஸ்னிய மண்ணில் மீண்டும் நிகழ்த்தப்பட்டது. ஈழத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதையும், பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதையும், ஐக்கிய நாடுகள் சபை உள்பட, சர்வதேச சமூகம் எப்படி வேடிக்கை பார்த்ததோ, அப்படித்தான் போஸ்னியாவில் நடத்தப்பட்ட இனப்படுகொலையையும் வேடிக்கை பார்த்தது.
யுத்தத்திற்கு நடுவில், தொடர் குண்டுவீச்சிற்கு நடுவில் ஐக்கிய நாடுகள் சபையால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பெண்களையும் ஆண்களையும் தனித்தனியே பிரித்து, வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கொன்று புதைத்தார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையால், சர்வதேச சமூகத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் உண்மையை அப்படியே குழிதோண்டிப் புதைப்பது சாத்தியமேயில்லாதது என்பதற்குச் சாட்சியாக, சில ஆண்டுகள் கழித்து இந்த இனப்படுகொலை சம்பந்தமாக நூல் ஒன்று வெளிவந்தது. ‘ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் கீழ்’ என்கிற தலைப்பிலான அந்த நூலை ஹசன் நுஹனோவிச் எழுதியிருந்தார்.
வெறும் நூல் மட்டுமல்ல இது. 1995இல் நடந்த போஸ்னிய இனப்படுகொலையை நேரில்கண்ட சாட்சியாகவும், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தில் தோல்வியின் ஆவணமாகவும் மாறிவிட்ட நூல். ஹசன் நுஹனோவிச் ஐக்கிய நாடுகள் மற்றும் டச்சு அமைதிப்படைக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். இனப்படுகொலையின் போது தாய், தந்தை, சகோதரரை இழந்தவர். தனிப்பட்ட வலி மற்றும் அனுபவங்களின் அடிப்படையிலும், பல ஆண்டுகள் சேகரித்த ஆவணங்களின் அடிப்படையிலும் நூலை எழுதினார்.
பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிகாவில் போஸ்னிய முஸ்லிம்கள் எதிர்கொண்ட முற்றுகை, பட்டினி, அச்சம் கடைசியில் படுகொலை என நிகழ்ந்த எல்லாவற்றையும் சொல்லி, ‘பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்த சர்வதேச சமூகம் ஏன் தோல்வியடைந்தது’ என்கிற கேள்வியை எழுப்புகிறது இந்த நூல். இது ஒரு வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, உலகின் சக்திகள் செயல்படத் தவறும்போது, மனிதசமூகம் எவ்வாறு பெரிய பேரழிவைச் சந்திக்கும் என்பதற்கான சாட்சியம். போஸ்னிய இனப்படுகொலையைப் புரிந்துகொள்ள மிக முக்கியமான புத்தகம் இது.
இயக்குநர் ஜாஸ்மிலா ஸ்பானிக்கின் கைகளில் இந்தப் புத்தகம் கிடைக்க, வாசித்து முடித்தவுடன் திரைப்படமாக்க வேண்டும் என்று முடிவுசெய்கிறார். திரைப்படத்தைத் தயாரிப்பதற்குப் போஸ்னிய நிதி உதவி மட்டும் போதாததால், ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி போன்ற நாடுகளின் தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கத் தொடங்குகின்றன. ஆனாலும் பணப்பற்றாக்குறை ஏற்பட, வங்கியில் கடன் வாங்கி திரைப்படத் தயாரிப்பைத் தொடர்கிறார் இயக்குநர்.
இவ்வளவு சிரமப்பட்டு இந்தப் படத்தை ஏன் எடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, “மக்கள் என்ன நடந்தது என்று மறந்துவிட்டால், அல்லது மறக்கத் தொடங்கினால் வரலாறு மீண்டும் நிகழும் அபாயம் இருக்கிறது அதனால்தான் இந்தத் திரைப்படத்தை எடுத்தேன்” என்று சொல்கிறார் இயக்குநர்.
திரைப்படத்தின் கதைக்குள் செல்வதற்கு முன்னால் வரலாற்றில் என்ன நடந்தது என்று அறிந்துகொள்வது, வரலாற்றையும், திரைப்படத்தையும் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் உதவியாக இருக்கும். 1991 – 92 காலக்கட்டத்தில் யுகோஸ்லோவியா சிதறத் தொடங்கியது. போஸ்னியா, ஹெர்சகோவினா 1992இல் சுதந்திரத்தை அறிவித்தன.
போஸ்னியா முஸ்லிம்கள், செர்பியர்கள் மற்றும் குரோஷியர்கள் ஆகியோர் நாட்டில் வாழ்ந்த மூன்று முக்கிய இனக்குழுக்கள். இவர்களுக்கிடையே கடுமையான மோதல் உருவாக, நாட்டில் இருந்த தேசியவாதம் பேசிய தலைவர்கள், இனச்சுத்திகரிப்பு என்கிற பெயரில் முஸ்லிம் மக்களை, அவர்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றவும் பிற்பாடு படுகொலை செய்யவும் தொடங்கினர்.
போஸ்னிய மண்ணில் இன்றும்கூட கூட்டம் கூட்டமாகப் புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டறியப்படுகின்றன. தங்கள் உறவினர்களின் அடையாளங்களை அந்த எலும்புக் கூடுகளில் தேடித்தேடி அழுது கொண்டிருக்கிறார்கள் இழந்த மனிதர்கள். எல்லா யுத்தங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் போல போஸ்னிய யுத்தத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்திலும் நிலத்திற்கடியிலும் தேடும் துயரம் தொடர்ந்து கொண்டிருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, மானுட நாகரிகம் பேசிக் கொண்டிருக்கும் எல்லாருக்கும் அவமானம்தான்.
யுத்தப் பின்னணியில் தொடங்கும் திரைப்படத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் கதையின் நாயகி ஐடா செல்மனாகிச். நகர மேயர், டச்சு ராணுவத் தளபதிக்கு இடையிலான யுத்தம் பற்றிய உரையாடலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.
அமைதிப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிகா நகரத்தை செர்பியாவின் பிரிவினைவாத அமைப்பின் ராணுவம் கைப்பற்றுகிறது. மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி ஐநாவின் பாதுகாப்புத்தளம் நோக்கிச் செல்கிறார்கள். ஐடாவின் கணவரும் இரண்டு மகன்களும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறுகிறார்கள்.
எல்லாரையும் உள்ளே அனுமதிக்க முடியாமல் கொஞ்சம் பேரை மட்டும் அனுமதிக்கிறார்கள் அமைதிப் படையினர். மக்கள் கூட்டத்திற்கு நடுவில் குடும்பத்தைத் தேடி அலைகிறார் ஐடா. அங்கே ஒரு மகனை மட்டும் பார்க்க, மற்ற இருவரும் வெளியே இருக்கிறார்கள் என்று தெரிந்து, ராணுவத்தினரை அணுகி கணவரையும் இன்னொரு மகனையும் அனுமதிக்கச் சொல்லிக் கெஞ்சுகிறார். அனுமதி கிடைக்காமல் அங்கும் இங்கும் அலைந்து திரிகிறார் ஐடா.
கைப்பற்றப்பட்ட நகரத்திற்குள் வெற்றிக் களிப்போடு ராணுவத் தளபதி வருகிறான். அவனோடு நடத்தப்படவிருக்கும் பேச்சுவார்த்தைக்குப் பொதுமக்களின் சார்பாக மூன்றுபேரை அழைத்துச்செல்ல அமைதிப்படை முடிவு செய்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கணவரையும் இன்னொரு மகனையும் உள்ளே அழைத்துச் செல்கிறார் ஐடா.
கணவர் பேச்சுவார்த்தைக் குழுவில் ஒருவராக இடம்பெறுகிறார். பேச்சுவார்த்தையில் பொதுமக்களைப் பாதுகாப்பாகப் பேருந்துகளில் அனுப்ப வாக்குக் கொடுக்கிறான் ராணுவத் தளபதி. ஆனால் அவர்கள் திட்டம் வேறாக இருக்கிறது.
பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபக்கம் ராணுவத்தினர் ஐநாவின் பாதுகாப்புத் தளத்திற்கு வருகிறார்கள். சோதனை செய்கிறோம் என்கிற பெயரில் பெண்களையும் ஆண்களையும் பிரிக்கத் தொடங்குகிறார்கள். குடும்பத்தைக் காப்பாற்ற டச்சு அதிகாரிகளிடம் கெஞ்சுகிறார் ஐடா.
சக மொழிபெயர்ப்பாளராக உடன் வேலை செய்கிறவர், ஐடாவின் குடும்பத்தினரை ஐநா ஊழியர் பட்டியலில் சேர்த்து உதவி செய்கிறார். நிம்மதிப் பெருமூச்சு விட நேரமில்லாத ஐடா மூவரையும் எங்கு, எப்படி மறைத்து வைக்கலாம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார். மூவரையும் ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு வெளியே வருகிறார்.
சிறுவர்களும் ஆண்களும் மட்டும் தனியாகச் சில வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட, பெண்கள் பேருந்துகளில் இன்னொரு பக்கம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஐடாவின் குடும்பத்தினரும் ராணுவத்தினரால் கண்டறியப்பட்டு அழைத்துச் செல்லப்பட, ஐடா எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார்.
மொழிபெயர்ப்பாளராக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதால் கணவரை மட்டும் காப்பாற்றி உதவி செய்கிறோம் என்று சொல்ல, ஒரு மகனையாவது விட்டுவிடச் சொல்லிக் கேட்க, முடியாது என்று சொல்கிறார் ராணுவ அதிகாரி. மூவரும் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று அறிந்த மனைவியாகவும் தாயாகவும் அலறித்துடிக்கிறார் ஐடா.
ஒரு கட்டிடத்தில் அடைக்கப்பட்ட ஆண்கள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சில ஆண்டுகள் கழித்து வீட்டிற்குத் திரும்புகிறார் ஐடா. ராணுவ அதிகாரி ஒருவன் குடும்பத்தோடு வீட்டை ஆக்கிரமித்திருக்கிறான். குடும்ப ஒளிப்படம் ஐடாவின் கையில் கொடுக்கப்பட, எதுவும் செய்யமுடியாமல் வெளியேறுகிறார். திரைப்படத்தின் நெஞ்சை உலுக்கும் காட்சியாகத் தோண்டப்பட்ட எலும்புக் கூடுகள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் இழந்த உறவுகளைத் தேடுகிறார் ஐடா. சில அடையாளங்களை வைத்து எலும்புக் கூட்டின் முன்னால் அழுதுதீர்க்கிறார் ஐடா.
இறுதிக் காட்சியில், பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறார் ஐடா. அவருடைய மேற்பார்வையில் குழந்தைகள் மேடை நாடகம் நடத்துகிறார்கள். இனப்படுகொலையில் உயிர்த் தப்பியவர்கள், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், அந்தக் கொடூரங்களில் பங்கேற்றவர்கள் என ஒரே சமூகத்தில் குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களும் ஒன்றாக வாழவேண்டிய சூழலைக் காட்டித் திரைப்படம் முடிகிறது.
நமக்குத்தான் ஈழம், காசா என என்றும் அழுத்தும் நினைவுகள் மேலெழுந்து வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு திரைக்கதை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கும், எப்படி எடுக்கப்பட்ட வேண்டும் என்பதற்கும் நல்ல சாட்சி இந்தத் திரைப்படம். உண்மையின் பக்கம் நிற்கும் கலைஞர்களால் என்ன பயன் என்கிற கேள்விக்கு, இந்த திரைப்படத்தைப் போல வரலாற்றில் உண்மை வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று பதில் சொல்லலாம்
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com