கடந்த 2017-இல் வெளியானது ‘அருவி’. அன்றைக்கு மெல்லக் கொல்லும் ஒன்றாக இருந்த ‘எச்.ஐ.வி’ தொற்றுக்கு ஆளான ஓர் இளம் பெண், போலியான சக மனிதர்களிடம் எதிர்கொள்ளும் அவலங்களை மிக நுணுக்கமாகச் சித்தரித்த படம். அதில் அருவியின் கதாபாத்திரத்தை வெறும் நோயாளியாக காட்டாமல், சமூகத்தின் மீதான ஒரு கேள்வியாக முன்னிறுத்தினார் அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு.
தற்போது 9 ஆண்டுகள் கழித்து வந்திருக்கும் ‘ப்ராமிஸ்’, எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகும் ஓர் இளைஞனைக் கதையின் நாயகனாக முன்னிறுத்தியிருக்கிறது. எச்.ஐ.வி. தொற்றை முழுவதுமாக உடலிருந்து அழித்தொழிக்கும் மருந்து இன்னும் கண்டறியப்படாத நிலையில், மருத்துவர் பரிந்துரையுடன் ‘ஆன்டிரெட்ரோவைரல் தெரபி’ மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் நோயை நீண்ட காலம் கட்டுக்குள் வைத்து வாழ முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.
மருத்துவ உலகில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் சமூகத்தின் பார்வையில், அதன் பொதுப் புத்தி என்பது நோய்வாய்ப்பட்ட ஒன்றாகவே தொடர்வதை இந்தப் படம் ‘ஷாக் வேல்யூ’ தரும் பல திருப்பங்களோடு தற்கால நிலைமையைத் தோலுரித்துக் காட்டுகிறது.
இப்படியொரு சீரியஸான கதையைத் தன்னுடைய முதல் படத்தில் கையாள வேண்டும் என்று நினைத்தற்காகவே இந்தப் படத்தை எழுதி, இயக்கி, கதாநாயகனாகத் திறம்பட நடிக்கவும் செய்திருக்கும் அருண்குமார் சேகரனைப் பாராட்டலாம்.
ஒரு சராசரி நடுத்தர வர்க்கக் காதல் கதையாகத் தொடங்கி, பின்னர் அது பாதிப்புக்கு உள்ளாகும் நாயகனைக் காதல் மனைவியும் சக மனிதர்களும் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை வேலூரின் நகர வாழ்க்கைப் பின்னணியில் இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.
படத்தின் தலைப்பும் மையக்கருவும் ‘ப்ராமிஸ்’ என்கிற ஒழுக்கத்தின் ஒரு கூறாகப் பார்க்கப்படும் ‘வாக்குறுதி’களைச் சார்ந்தே இயங்குகின்றன. நாயகன் தன் காதலிக்குத் தரும் வாக்குறுதியை மீறும்போதெல்லாம், அவனது வாழ்க்கை அடுத்தடுத்த வீழ்ச்சிகளை நோக்கி நகர்கிறது. மதுப்பழக்கம் என்பது இங்கு வெறும் தனிமனிதப் பலவீனமாக மட்டுமன்றி, அவனது நிதானத்தையும் பகுத்தறிவையும் சிதைக்கும் ஒரு முதன்மைக் காரணமாகக் காட்டப்பட்டுள்ளது.
சங்கமித்ரன் (அருண்குமார் சேகரன்) ஒரு செராமிக் டைல்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஊழியன். அவன் தினசரி அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் கல்லூரிப் பேருந்துக்காகக் காத்திருக்கும் மாணவி லட்சுமியைக் காண்கிறான். லட்சுமி அவனைக் கண்டுகொள்வதாக இல்லை. என்றாலும் அவனை அவள் தன் பார்வைகளில் நிராகரிக்கவும் இல்லை.
குழப்பத்துடன் தொடரும் இந்த மௌனச் சந்திப்புகளால் லட்சுமியிடம் காதலைச் சொல்லத் தயங்கி நிற்கிறான் மித்ரன். நண்பர்கள் பொறுமையிழந்து அவனைக் கேலிக்கு உள்ளாக்கும்போது தாம் கோழையல்ல என்பதை நிரூபிக்க, லட்சுமியை நெருங்கிக் கேட்கிறான்.
அப்போதுதான் அவள் துணிச்சலான பெண் என்பது அவனுக்குத் தெரிகிறது. ‘என் கல்லூரிக் காலமே முடியப்போகிறது.. நீ ரொம்ப லேட்.. நான் உன்னை எப்போதோ காதலிக்கத் தொடங்கிவிட்டேன்’ என்று தன் உள்ளக் கிடக்கையைப் போட்டு உடைக்கிறாள்.
அதன்பிறகு காதலர்கள் ஊரெங்கும் சிறகடிக்கிறார்கள். லட்சுமி குடும்பத்தினர் அவளது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. மித்ரன் குடும்பத்தில் அந்தப் பிரச்சினை இல்லை. நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் அவர்களது காதலில் ஒரு ‘ப்ராமிஸ்’ சிக்கலைக் கொண்டு வருகிறது. லட்சுமியின் தலையில் கை வைத்துக் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யும் மித்ரன், நண்பர்களின் வற்புறுத்தலால் ஒரு நாள் குடிக்கப்போய் அது லட்சுமிக்கு தெரிந்துவிடுகிறது.
மித்ரனுக்குப் பாடம் கற்பிக்க, அவனது அழைப்புகளை ஏற்காமல் விலகுகிறாள். விலகலுக்கு இன்னொரு காரணம், முன்பின் தெரியாத ஒரு பெண்ணுக்கு மனிதாபிமானத்துடன் இரவு நேரத்தில் அவன் ‘லிப்ட்’ கொடுத்தது. இதன்பிறகுதான் மித்ரன் மதுவை அதிகமாக நாட, இதற்கு மேலும் அவனை விட முடியாது என்று நண்பர்கள் முன்னிலையில் மித்ரனை திருமணம் செய்துகொள்கிறாள் லட்சுமி.
திருமணம் முடிந்து லட்சுமி கருவுறும்போது இருவருக்கும் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் மித்ரனின் வாழ்க்கையைப் பெரிய சோதனைக் களமாக மாற்றுகிறது. ‘எச்.ஐ.வி.க்கு சிகிச்சை எடுத்துகொண்டு எல்லோரையும்போல் வாழலாம்’ என்று லட்சுமி அரணாக நின்றாலும் சுற்றமும் சமூகமும் மித்ரனை எப்படி நடத்தினார்கள் அவன் தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினானா இல்லையா என்பதை நோக்கி படம் நகர்கிறது.
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருக்கும் மித்ரன் கதாபாத்திரத்தின் தோற்றம், அதன் அபிலாஷைகள் யதார்த்தமாக வடிக்கப்பட்டுள்ளன. காதல் காட்சிகளில் வெகு இயல்பாகவும் எச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளான பின், மித்ரன் எதிர்கொள்ளும் பயம், குற்றவுணர்ச்சி, இயலாமை ஆகியவற்றையும் நம்பகமான முகபாவனைகள் கொண்டு நடிப்பில் ஈடுபாட்டுடன் வெளிப்படுத்தியுள்ளார் அருண் குமார்.
தொடக்கத்தில் ஒரு சாதாரணக் கல்லூரி மாணவியாக அறிமுகமானாலும், கதையின் பிற்பாதியில் நாயகியின் கதாபாத்திரம் வலிமையுடன் எழுதப்பட்டுள்ளது.
கணவனின் நோயை அறிந்த பின்பு அதன் தற்கால மருத்துவ முன்னேற்றங்களை அவனுக்கு எடுத்துக்கூறி ஆதரவாக நிற்கும் இடத்திலும், சமூகத்தின் தப்பெண்ணங்களுக்கு எதிராகத் தன் சுயத்தை நிலைநிறுத்தப் போராடும் இடத்திலும் நாயகி புரிதலும் அறிதலும் கொண்ட பெண்ணாக நம்பிக்கை அளிக்கிறாள்.
அதேநேரம், லட்சுமி பட்டதாரியாக இருந்தும் கூட, காதலித்த நாள்களில் ஏற்படுத்தும் தன்முனைப்பு விலகல்கள் ஆணுலகில் ஏற்படுத்தும் சிக்கல் குறித்து அறியாமல் போய்விடுவது பரிதாபகரமான முரண்.
லட்சுமி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நதியா சோமு, காதலுக்காகவும் பின்னர் காதலனோடும் துணிந்து போராடும் நடுத்தர வர்க்கப் பெண்ணாக வெகு எளிதாகக் கவர்ந்துவிடுகிறார். முதன்மை கதாபாத்திரங்களைப் போலவே, பிற துணைக் கதாபாத்திரங்கள் வேலூர் நிலப்பரப்பின் மண் மைந்தர்களாகக் காட்டப்பட்டுள்ளது கதை நிகழும் களத்தைக் கண் முன் நிறுத்த உதவியிருக்கிறது.
தற்காலத் தமிழ் சினிமாக்கள் பேசத் துணியாத ஒரு பிரச்சினையில் சமூகம் கொண்டுள்ள மனத்தடைகளை ‘ப்ராமிஸ்’ துணிச்சலாகப் பேச முற்பட்டாலும், திரைக்கதையில் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டிய சில விடுபடல்கள் திரை எழுத்தின் போதாமையைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன.
நாயகனின் எதிர்பாராத வாழ்க்கைச் சிக்கல் கதையின் மையப் பிரச்சினையாக இருக்கும்போது, அவன் மீது அக்கறை கொண்டவர்களாகச் சித்தரிக்கப்பட்ட பெற்றோரின் எதிர்வினை என்ன என்பது படத்தில் இடம்பெறவில்லை. அல்லது எடுக்கப்பட்ட காட்சியை எடிட்டர் கழித்துவிட்டாரா என்று தெரியவில்லை.
வேலூர் மாவட்டத்தின் வறட்சி, பசுமை என்கிற கலவையான நிலப்பரப்பை வெம்மையுடன் காட்சியாக்கி கதையின் தீவிரத் தன்மைக்கும் கதாபாத்திரங்களின் அலைச்சல் மற்றும் உளைச்சலுக்கு ஒரு ‘விஷுவல் மெட்டபர்’ போல் ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் வினோத் குமார்.
எளிய ஆனால் கவரும் வரிகளோடு இனிய மெட்டுகளை இசைத்திருக்கிறார் சரவண தீபன். குறிப்பாக ‘தேன்மழை சாரலே’ (காதலின் உச்சம்), ‘உதிர்கிறேன் நானடி’ (துயரத்தின் உச்சம்) ஆகிய இரண்டு பாடல்களின் வரிகளும் இசையும் கதையின் உணர்ச்சிப் போராட்டத்துக்கு வலுசேர்க்கின்றன.
கரோனாவைப் போலவே மக்கள் மறந்துபோன ‘எச்.ஐ.வி’ தொற்றின் தற்கால நிலைமையை நினைவூட்டும் ஒரு கதையில், காதல், குடும்ப வாழ்க்கை, சமூக மனநிலை எனப் பொழுதுபோக்கையும் சீரியஸ் தன்மையையும் ஏற்றிச் சொல்லியிருக்கும் இந்த ‘ப்ராமிஸ்’, மதுவின் தீமை, நன்கு புரிந்துகொண்டவர்கள் கூட அவசர முடிவுகளை எடுப்பதால் விளையும் ஆபத்து, மனித உறவுகளுக்குள் நிலவும் சிக்கல்களைப் பேசி தீர்க்க வேண்டும் என்பதில் எல்லாக்காலத்திலும் நிலவும் போதாமை ஆகியவற்றைத் தூக்கிப் பிடித்த வகையில் ஒரு ‘ப்ராமிசிங்’ முயற்சி.