ஏழு மலை, ஏழு கடல் எனக் காதல் சில சமயம் பெரிய தடைகளைத் தாண்டும் வீரக் கதை! பல சமயம்; சொல்லப்படாத காதலின் சொற்கள் மனசுக்குள் சுமையாகச் சேரும்போது அது மௌனப் பெருவெளியின் காதல் பயணமாகிவிடுகிறது. ‘மைலாஞ்சி’ காதலின் விடுதலையைக் கோரிப் பயணிக்கும் மென்மையான காதல் நாடகம். அதன் மென்மை, பலமாக இருந்ததா, பலவீனமாக அமைந்ததா என்று பார்க்கலாம்.
சூர்யா (ஸ்ரீராம் கார்த்திக்) ஒரு கானுயிர் ஒளிப்படக் கலைஞன். ‘லாபிங்த்ரஷ்’ (நீலகிரி சிரிக்கும் சிட்டு) என்கிற அழகான குரலும் வனப்பான இசையெழுப்புதல்களையும் நிகழ்த்தக்கூடிய சிறு பறவையை ஒளிப்படம் எடுத்து, தான் ப்ரீலேன்சராகப் பணிபுரியும் ஊடக நிறுவனத்துக்கு அனுப்ப கேமராவுடன் ஊட்டிக்கு வருகிறான்.
வந்த இடத்தில் வெள்ளந்தியான ஆங்கிலோ இந்தியப் பெண்ணான சாருவை (க்ருஷா குருப்) சந்திக்கிறான். தனது வளர்ப்புச் சித்தியின் தம்பியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கும் அவள், அந்தத் திருமணத்திலிருந்து தப்பிக்க, சூர்யாவின் உதவியை நாடுகிறாள். சாருவுக்கு அவளுடைய காதலில் உதவி செய்யப்போய், சூர்யா தன் காதலின் ஒளியில் நனைகிறான். விருப்பமில்லாத திருமணத்திலிருந்து சாருவை அவளது காதல் விடுதலை செய்ததா? காதலைக் கரை சேர்க்கப் போனவன், தன் காதலில் கரையேறினானா என்பது கதை.
மலையிலிருந்து ஊற்றெடுத்து ஒரு சிற்றோடையாக சலசலத்தபடி சமவெளி நோக்கி வரும் நதியைப் போல் ஆராவாரமோ அவசரமோ இல்லாமல் நிதானமாகப் பயணிக்கிறது திரைக்கதை. இது குளிர்காலத்தின் நடுவே அரும்பும் காதலின் மென்மைக்குக் கைகொடுக்கும் என்று திரைக்கதையாசிரியர், இயக்குநர் அஜயன் பாலா எண்ணியிருக்கிறார். ஆனால், காதலை பரிமாறிக் கொள்வதில் இருக்கும் தயக்கம், காதலுக்கு உதவுவதில் காட்டவேண்டிய நம்பிக்கை மற்றும் அக்கறை எனத் திரைக்கதைக்குப் பெரிய அழுத்தம் கொடுக்காத முதன்மைக் கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்தான் கதையின் மையப் பிரச்சினையாக இருக்கிறது. புரிதல் வசமாகும்போது இவை பனிபோல் உலர்ந்துவிடக் கூடிய இந்தச் சிறு தடையே நீண்ட நேரம் நீட்டிக்கப்படுவது பார்வையாளர்களை அதிர்ச்சியுற வைக்கிறது.
நாயகனின் கானுயிர் ஒளிப்பட லட்சியம், ஒரு மூத்த ஒளிப்படக் கலைஞரின் தத்துவார்த்த அறிவுரையில் தேக்கமடைந்துவிடுவதும் நாயகன் எதிர்கொள்ளும் விபத்தும் பார்வையாளர்களுக்குச் சோர்வைக் கொண்டுவந்து சேர்க்கின்றன.
ஆனால், இந்தச் சோர்வுக்கு மத்தியிலும் ஊட்டியைக் காதலின் தொட்டிலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் செழியனின் படப்பதிவும் அதனோடு பிணைந்து முயங்கும் இசைஞானி இளையராஜாவின் இசையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் பயணத்தைத் தொடர்ந்து பின்தொடரும் உற்சாகத்தை அளித்துவிடுகின்றன.
சூர்யாவாக வரும் ஸ்ரீராம் கார்த்திக் அழகாக இருப்பதுடன் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரது பால்யகாலம் அவரது நிகழ்கால உளவியல் சிக்கலுக்குத் தாக்கம் தருகிறது என்கிற சித்தரிப்பு மிகவும் பலவீனமாக இருந்தாலும் அவர் தன் மனக்குழப்பத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் தன்னுடைய அமைதியான அளவான நடிப்பால் நம்பகத்தன்மையை உருவாக்கியிருக்கிறார்.
கிரிஷா குருப் எளிய தோற்றம் கொண்டிருந்தாலும் குழந்தை மனம் கொண்ட ஒரு பெண், குமாரியாக உணரும் காதல் தருணங்களை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இருவருக்குமான இணைப் பொருத்தம் நன்றாக இருந்தாலும் அவர்களிடையிலான அழுத்தமான உணர்வுத் தருணங்களைப் போதிய அளவுக்கும் புதுமையாகவும் உருவாக்குவதில் திரைக்கதை பின்தங்கிவிட்டது. அப்போதெல்லாம் இளையராஜாவின் இசையே அக்கறையுடன் ஓடிவந்து காலியிடங்களை இசைக் கவிதைபோல் நிரப்பியிருக்கிறது. பழைய மெட்டுக்களை நினைவூட்டினாலும் ’உன்னை நான் விரும்பினேன் இது உனக்குத் தெரியுமா?’, ‘வண்ண வண்ணக் கனவு என்னைத் தொடர்ந்தே வருதே’ ஆகிய பாடல்களைக் காதின் வழியே பனியின் குழைவாகச் செவிவழி நம் மனதில் இறங்கிவிடுகிறார் ராஜா. பின்னணி இசையிலும் அவரின் வல்லமை நின்று பேசுகிறது.
துணைக் கதாபாத்திரங்களில் சுவாரஸ்யம் அளிப்பது ஜூடு என்கிற சிறுவன் கதாபாத்திரம். வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் பல சிறார்களைக் காண முடியும் என்பதை அந்தச் சிறுவன் நினைவூட்டிச் செல்கிறான்.
‘மயிலாஞ்சி’ அமைதியாகப் பெய்யும் சாரல் மழை மாதிரி. அதில் புயல் மழையின் வேகத்தை எதிர்பார்க்க முடியாது. வேகமாகக் கதை சொல்லலை விரும்பும் பார்வையாளர்களுக்கு இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் மென்மையான காதல் கதைகள், இசை மற்றும் ஒளிப்பதிவில் ஒளிரும் நிதானமான காதல் சினிமாக்களை விரும்பும் யாருக்கும் இப்படம் ஒரு நல்ல தெரிவு.