இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: மனிதம் காத்த மாவீரன்

செய்திப்பிரிவு

போர்முனையிலிருந்து போருக்கு எதிரான கதையை பேசுகிறது ’தி லாஸ்ட் ஃபுல் மெஷர்’(The Last Full Measure) திரைப்படம். வியட்நாம் போரில் பங்கேற்ற அமெரிக்க விமானப்படை வீரர்களில் ஒருவர் வில்லியம் ஹெச்.பிட்சன்பார்கர். மரணமடைந்து 53 ஆண்டுகள் கழித்து நாட்டின் மிக உயரிய ராணுவ மரியாதைக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது.

வியட்நாம் போரின்போது காயமடைந்த வீரர்களைக் காப்பாற்றும் பொறுப்பில் பணிக்கப்பட்டிருந்தார் வில்லியம். அப்படி ஒருநாள் கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில், அவர் தனது உயிரைப் பணயமாக்கி 60 வீரர்களின் உயிரைக் காப்பாற்றினார். ஆனால், வெளியுலகுக்கு விளங்காத புதிராக அந்த மீட்பு நடவடிக்கையை ஒட்டி வில்லியம் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.

போர் முனையில் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு நேரும் அவமானமும் பழியும் வில்லியமுக்கு நேர்ந்தது. 32 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தச் சம்பவத்தின் வினோதப் பின்னணியை ஒரு பெண்டகன் அதிகாரி கிளற ஆரம்பிக்கிறார். வில்லியமின் சக வீரர்களில் உயிரோடிருப்பவர்களை தேடிச் சென்று விசாரணையைத் தொடர்கிறார். விசாரணையின் முடிவில் வில்லியமின் தற்கொலையின் பின்னாலிருக்கும் உண்மை வெளிப்படுகிறது.

50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு போர் வீரன் மீதான அவமானம் கழுவப்பட்டு, அவனை நாடே மெச்சத் தொடங்குகிறது. அதன் பிறகு நாட்டின் உயரிய விருதும் வழங்கப்பட, மரணமடைந்து 53 ஆண்டுகளுக்குப் பின்னர் வில்லியமுக்கு உரிய கவுரவமும் மரியாதையும் சேர்ந்தன. செபாஸ்டியன் ஸ்டேன், கிறிஸ்டோபர் பிளமர், சாமுவேல் எல்.ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படத்தை டாட் ராபின்சன் இயக்கி உள்ளார். 'தி லாஸ்ட் ஃபுல் மெஷர்’ திரைப்படம், அக்டோபர் 25 அன்று அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகிறது.

திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ:

SCROLL FOR NEXT