ஆனந்த ஜோதி

சித்திரப் பேச்சு: நீலகண்ட கணபதி

ஓவியர் வேதா

ஊருக்கு ஊர், கோயிலுக்கு கோயில், விநாயகப் பெருமான் இல்லாத இடமே இல்லை. இவர் ஆற்றங்கரை அரச மரத்தடியிலும் இருப்பார்; தெருமுனையில் உள்ள சிறிய கோவிலிலும் இருப்பார். விநாயகரைப் பெண் வடிவில் விக்னேஷ்வரி, கணேஷினி என்று வணங்கும் வழக்கமும் இங்கே இருக்கிறது. அதாவது, விநாயகர் யானை முகத்துடனும், பெண்ணின் உடலமைப்புடனும் இருப்பவர் . இவர், இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காட்சியளிக்கிறார். ஜபல்பூர் அருகே உள்ள பீராகேட் என்னும் இடத்திலும், தமிழகத்தில் குமரி மாவட்டம் சுசீந்திரம் திருத்தலத்திலும் பெண் வடிவில் காட்சியளிக்கிறார். இந்திரன் பூஜித்த திருத்தலம்; அத்திரி மகரிஷியின் பத்தினி அனுசுயா தேவி மும்மூர்த்திகளையும் குழந்தை களாக்கிய திருத்தலம்; நவக்கிரகங்கள் மேல்கூரையில் அருள்பாலிக்கும் தலம். நீலகண்ட கணபதி என்ற பெயரில் ஆஜானுபாகுவான மிகப் பெரிய விநாயகர், சக்தி தேவியை மடியில் அமர்த்தியபடி கட்சி தரும் தலம் இது. சரக்கொன்றை மரத்தடியில் மும்மூர்த்திகளும் அருளும் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில், ஸ்வாமி சன்னிதிக்கு எதிரில் உள்ள தூணில்தான் இந்த அபூர்வ வடிவ விக்னேஸ்வரி உள்ளார். தலையிலும், மார்பிலும் மற்றும் இடையிலும் வித்தியாசமான அணிமணிகளும், ஆடையும் அணிந்துள்ளர். தலையை இடது பக்கமாகத் திருப்பியபடி சிரித்த முகத்துடன், மேலிரு கரங்களில் பாசம், அங்குசம் தாங்கியும், கீழ் இரண்டு கரங்கள் அபய , வரஹஸ்தமாகவும், வலது காலை மடித்து, இடது காலைத் தொங்க விட்டபடி, அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். இவர் எந்தக் காலத்தை சேந்தவர் என்பதை சரியாக கணிக்க முடியவில்லை. இக்கோயிலுக்கு சோழர்களும், பாண்டியர்களும், சேர மன்னர்களும் திருமலை நாயகரும், திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியாளர்களும் திருப்பணி கள் செய்துள்ளனர். பத்தாம் நூற்றாண்டில் கோப்பர கேசரி வர்ம பாண்டியன் காலத்தில் இக்கோயில் மிகவும் சிறப்புடன் இருந்ததால் அநேகமாக இந்தச் சிற்பம் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

SCROLL FOR NEXT