சாந்தமே உருவாக அபயக்கரம் காட்டி கம்பீரமாகவும், ஒய்யாரமாகவும் நிற்கும் தோரணையே அற்புதம். தலையில் அழகிய ஜடா முடியும், காதில் மகர குண்டலங்களும் , மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரமும், வலது கீழ் கரம் அபயஹஸ்தமாகவும், இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி சற்று இடுப்பை வளைத்து நிற்கும் அழகே அழகு.கழுத்திலும், இடையிலும் அணிமணிகளும், ஆடைகளும் சிறப்பாக உள்ளன. சாமுத்திரிகா லட்சணப்படி இடையும், வயிற்றுப் பகுதியில் மூன்று மடிப்புகளும் உள்ளன. காலடியில் மகிஷாசுரன் தலை இல்லை. இந்தச் சிற்பம் சோழர் காலத்துப் பாணியை ஒத்துள்ளது. இந்தச் சாந்த துர்க்கை அம்மன் இருப்பது, கோயில்களில் மிகப் பழமையானது; மகேந்திர பல்லவன் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்தது; பின்னர் சோழப் பேரரசர் கண்டராதித்தர் துணைவியார் செம்பியன் மாதேவியரால் கற்றளியாக மாற்றம் செய்யப்பட்ட திருத்தலம்; அஷ்ட துர்க்கைகளின் சன்னிதிகள் தனித் தனியாக உள்ளது; தேவேந்திரன் பூஜித்த தலம்; நமி நந்தி அடிகள் நீரால் விளக்கேற்றி வழிபட்ட திருத்தலம்; அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்று; எமதர்மனே சண்டேஸ்வரராக அமர்ந்த ஊர்; நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் நின்றபடி இறைவனை பூஜிக்கும் கோலத்தில் உள்ள திருத்தலம் எனப் பல சிறப்புக்களை உடைய திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கிழக்குக் கோபுரத்தின் அருகில்தான் இந்தச் சாந்த துர்க்கை வீற்றிருக்கிறாள்.