ஆனந்த ஜோதி

சித்திரப் பேச்சு: சாமரம் வீசும் அழகி

ஓவியர் வேதா

வலது கரத்திலே சாமரம் இருக்க, இடது கரத்தை இடுப்பிலே வைத்துக்கொண்டு, இடது காலை சற்று வளைத்து ஒய்யாரமாக நிற்கும் பாங்கு அவளைத் தனித்துவம் கொண்டவளாக மாற்றுகிறது. தலையில் கிரீடமும், காதில் மகர குண்டலங்களும், அதைச் சுற்றியுள்ள அலங்காரங்களும், அவள் அழகை மேலும் அதிகப்படுத்துகின்றன.

கழுத்தைச் சுற்றி அழகான முத்தாரங்களும், இடையில் ஆடை ஆபரணங்களும், கால்களில் தண்டையும், சிலம்பும் சிறப்பு சேர்க்கின்றன. சாமரத்தைச் சற்று உற்று நோக்கினால் கவரிமானின் ரோமக்கற்றைகள் தத்ரூபமாகவும், இயற்கையாகவும் பிடியுடன் காட்டப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். சிற்பியின் ரசனையும் தேர்ச்சியும் தனித்திறனும் தெரிகின்றன. இடையில் உள்ள ஆடைகள் காற்றில் பறப்பதுபோல் தெரிகிறதல்லவா.

சிறப்பான அலங்காரத்துடன் காணப்படும் இந்த அழகியை சாமரம் வீசும் சேடிப்பெண் என்பதைவிட 'சாமரத்துடன் கூடிய தேவி' என்றால் மிகையாகாது. இந்த இளம்பெண்ணின் சிற்பம் சோழர் காலத்தை சேர்ந்தது. பத்தாம் நூற்றாண்டில் பராந்தக சோழனின் திருப்பணியால் உருவான தில்லை நடராஜர் கோயிலின் மேலக் கோபுரத்தின் வடக்கு பக்கத்தில் இருந்து அனைவரையும் இவள் கவர்ந்திழுத்துக்கொண்டிருக்கிறாள்.

SCROLL FOR NEXT