ஓவியர் வேதா
ஏழாம் நூற்றாண்டில் முத்தரையர்களால் கட்டப்பட்ட திருமெய்யம் வேணுவனநாதர் ஆலயத்தில் இருக்கும் கண்ணப்ப நாயனார் சிலை இது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
கண்ணப்ப நாயனார் கதையின் நிகழ்ச்சி இந்தச் சிலையில் உள்ளது. சிவனுக்குப் படைப்பதற்காக தனது ஒரு கண்ணை நோண்டி இடது கரத்தில் வைத்துள்ளார். வலது காலை வளைத்தும் இடதுகாலைச் சற்று வைத்து ஊன்றியும் நிற்கிறார். சிவலிங்கம் அவர் காலடியில் உள்ளது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு சிறப்பம்சம் ஏதும் தெரியாவிட்டாலும், அவரது காலணி என்னை மிகவும் ஈர்த்தது.
கண்ணப்ப நாயனார் அணிந்திருந்த தோல் செருப்பு அக்காலகட்டத்தில் இருந்த கைத்தொழில்நுட்பத்தைக் காண்பிக்கிறது. இத்தனை நுணுக்கமான சிற்பங்களின் மேல் சுண்ணாம்படித்து, நமது முன்னோர்களின் கலைஞர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் எல்லாம் காலத்தில் மறக்கடிக்கப்படுவது கண்டு வருந்தாமல் இருக்க முடியவில்லை.