உஷாதேவி
ராமர், சீதையோடு வனவாசம் செல்லும் வழியில் பல ரிஷிகளையும் கண்டு சேவித்தனர். அப்படிக் கண்டு தரிசித்தவர்களுள் முக்கியமானவர் அகத்திய முனிவர். ராமன் அகத்தியரைச் சந்தித்த வேளையில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார்.
இறைவன் அனைவருடைய தேவையையும் அறிந்து வரம் கொடுப்பவன். ஆனால், அகத்தியரோ இறைவனின் தேவையை அறிந்து அவர் தவம் இருந்து பெற்ற விஷ்ணுவின் வில்லையும், அம்புகள் குறையாத அம்புறாத் தூணியையும், ஒரு கத்தியையும் கொடுத்தார்.
பின்னாளில் ராவணனை சம்காரம் செய்வதற்கு யுத்த களத்தில் இந்த ஆயுதங்கள் உதவும் என்று முன்கூட்டியே ராமனுக்குக் கொடுத்தார். இன்றுபோய் நாளை வரச் சொன்ன ராவணனனை சம்காரம் செய்வதற்கு முன்னால் அகத்தியர் சொல்லிக் கொடுத்த ஆதித்ய ஹிருதயத்தைச் சொன்னார். யுத்த களத்தில் ராவணனை அழித்து வெற்றி வாகை சூடி, வீடணனுக்கு இலங்கையின் அரசனாக முடி சூட்டி மகிழ்ந்தார் ராமர்.
அகத்தியரைப் போல் இறைவனுக்கு நான் எந்த வகையிலும் உதவவில்லையே என மனம் வருந்துகிறாள் நம் திருக்கோளுர் பெண் பிள்ளை ராமானுசரிடத்தில்.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com